உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசும் நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்

மதுரை: உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசும் நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் தீரன் சிவமுருகன் என்பவர் கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், ஒன்றிய அரசு சார்பாக கொண்டுவரப்பட்ட வன பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு கருத்துக்கள் பொதுமக்களிடம் கேட்கப்படுகிறது. அது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

15 நாளில் கருத்தை தெரிவிக்க அறிவிப்பில் கூறியுள்ளது. இந்த அறிவிப்பாணை சட்டவிரோதம், இந்தி, ஆங்கிலம் தெரியாத மற்ற மாநில பொதுமக்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எனவே ஒன்றிய அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், வனத்திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதித்தனர். இந்த தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி உயர்நீதிமன்ற கிளையில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசும் நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கடந்த வாரம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவதில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாத ஒன்றிய அரசு, அதன் உத்தரவுக்கு தடைவிதித்தால் மட்டும் உடனே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கின்றனர்.

இதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். நீதிமன்ற உத்தரவுகளை முறையாக பின்பற்றி விட்டு பிறகு வாருங்கள் என்று சாடினார். அதுமட்டுமின்றி ஒன்றிய அரசும், ஒன்றிய நிதியமைச்சகமும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்று கடும் விமர்சனம் செய்தார். பின்னர், அவசர சூழல் கருதி முறையீடு வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுத்தாக்கல் செய்யுங்கள், திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

The post உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசும் நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: