×

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம்

திருமயம் : அரிமளம் அருகே மாடு, குதிரை, வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீரணிப்பட்டி மடைக் கருப்பர் கோயில் கிடாய் வெட்டு பூஜை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை மாடு, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 38 ஜோடி மாடுகள், 31 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

மாட்டு வண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரம் போய் வர 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை அறந்தாங்கி தொட்டிச்சி அம்மன், 2ம் பரிசு கே.புதுப்பட்டி அம்பாள், 3ம் பரிசு பீர்க்கலைகாடு பெரியசாமி, 4ம் பரிசு மொட்டையாண்டி அண்ணாதுரை ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 31 ஜோடி மாடுகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. இதில் பந்தய தூரம் போய் வர 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் முதல் பரிசை மாவூர் ராமச்சந்திரன், மொட்டையாண்டி அண்ணாதுரை, 2ம் பரிசு பீர்க்கலைகாடு பெரியசாமி, கருவடைச்சேரி எஸ்ஆர்கே, 3ம்பரிசு வைரிவயல் வீரமுனி ஆண்டவர், துறையூர் வசந்த் பிரியன், 4ம் பரிசு கடையாத்துப்பட்டி செண்பகசாஸ்த அய்யனார், மூக்குடி தானியலட்சுமி ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றது. தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 31 குதிரைகள் கலந்து கொண்டதால் பந்தயம் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

இதில் முதல் பரிசை பவானி சிங்காரவேலன், கரூர் துணைவன் குரூப்ஸ், 2ம் பரிசு அழகாம்பாள்புரம் அல்லிராணி, உடையாளூர் தேவேந்திரன், 3ம்பரிசு தென்னங்குடி வைரவன், வல்லம் வேலு பிரபாகரன், 4ம் பரிசு வலங்கைமான் வெடி கடை, நாகூர் மணி ஆகியோருக்கு சொந்தமான குதிரை வண்டிகள் வெற்றி பெற்றன. முடிவில் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயம் கீரணிப்பட்டி – அரிமளம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர். இதில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Arimalam ,Kitai Vettu Puja ,Keeranipatti Madai Karuppar Temple ,Pudukkottai ,
× RELATED தஞ்சை திருவோணம் பகுதியில் சிலிண்டர்...