சென்னை: போரூர் அருகே ஆன்லைன் டெலிவரி ஊழியரின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து மர்ம நபர்கள் மிரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷன் (24). இவர் அமேசான் நிறுவனத்தில் ஆன்லைனில் பொருட்களை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் டெலிவரி செய்யும் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு பொருட்கள் டெலிவரி செய்வதற்காக பிரியதர்ஷன் பைக்கில் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை கையால் தாக்கி நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் தாக்கியதில் பிரியதர்ஷனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கூச்சலிட்டு உள்ளார். சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனை பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த பிரியதர்ஷன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பிரியதர்ஷன் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் டெலிவரி ஊழியர் மீது துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார், எதற்காக அவர்கள் தாக்கினார்கள், முன்விரோதம் ஏதும் காரணமா, அல்லது வழிப்பறி செய்யும் நோக்கில் தாக்கினார்களா? அந்த மர்ம நபர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து வளசரவாக்கம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
