புதுடெல்லி: முன்னாள் உபி அமைச்சரும் காங்கிரஸ் எம்பியான பிரமோத் திவாரி நேற்று கூறியதாவது: ராமர் கோயிலில் நன்கொடைகளில் இருந்து மட்டும் திருட்டு நடக்கவில்லை. கடந்த 1980களின் இறுதியில் ராமர் கோயிலுக்கான செங்கல்கள் கொண்டு செல்லும் பூஜைகளின் போதே இது போல் நடந்துள்ளன. நான் அயோத்தி கோயில் அமைந்திருக்கும் அவத் பகுதியைச் சேர்ந்தவன். 1985 முதல் 1990 வரை உபி சுற்றுலாத்துறை அமைச்சராகப் பணியாற்றினேன். ராம ஜென்மபூமி இயக்கத்தை நான் மிக அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
பாஜவில் உள்ள அனைவரும் காணிக்கை திருடர்கள் என்று நான் கூறவில்லை,ஆனால் காணிக்கை திருடர்கள் அனைவரும் அந்த கட்சியில் தான் உள்ளனர். பாஜவால் ராமர் கோயில் கட்டப்படவில்லை,உச்சநீதிமன்ற உத்தரவால்தான் கோயில் கட்டப்பட்டது என்பதே உண்மை. கோயில் கட்டுமான நேரத்தில் மக்களவை தேர்தல் நடந்தது. மோடிக்கு கோயிலை விட தேர்தல் முக்கியமாக இருந்தது.
இதனால் கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு பிரதிஷ்டை நடத்தப்பட்டது. கோயில் கட்டுவதில், அறக்கட்டளை உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றில் பெருமை தேடி கொள்ளும் மோடி, காணிக்கை திருட்டு பாவங்களில் இருந்து அவர் எப்படி தன்னை விடுவித்து கொள்ள முடியும். சம்பத்ராய் அறக்கட்டளை பொது செயலாளராக இருந்த போது காணிக்கை திருட்டு நிறுவனமயமான செயலாகி விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் பணம் கையாடல் நடந்துள்ளது என்றார்.
