மும்பை: பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசிவிட்டு துபாயில் குடியேறியுள்ளதாக நடிகர்கள் விவேக் ஓபராய் மற்றும் ஆர்.மாதவனை மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கடுமையாகச் சாடியுள்ளார். மகாராஷ்டிர நவ்நிர்மான் சேனாவின் மாணவர் அமைப்பான மகாராஷ்டிர நவ்நிர்மான் வித்யார்த்தி சேனாவின் 20ம் ஆண்டு விழா பேரணியில் அக்கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த விவேக் ஓபராய் மற்றும் இந்தியாவே மாறிவிட்டதாக மோடியைப் புகழ்ந்து பேசும் நடிகர் ஆர்.மாதவன் ஆகியோர் தற்போது துபாயில் குடியேறியுள்ளனர்.
பிரதமரும் ஒன்றிய பாஜக அரசும் நாட்டை வளர்த்துவிட்டதாகக் கூறும் இவர்கள், உண்மையிலேயே இந்தியாவை நேசித்தால் குடும்பத்துடன் துபாயில் வாழ்வது ஏன்; இவர்கள் ஒன்றிய அரசு ஆதரவு திரைப்படங்களில் நடிக்க மட்டுமே இங்கு வருகிறார்கள். இந்திய இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் நிபுணர்கள் வேலைவாய்ப்பின்மை மற்றும் போதிய வாய்ப்புகள் இல்லாததால் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதாகக் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத் தரவுகளின்படி, நமது குழந்தைகள் வெளிநாட்டுக் கல்விக்காக மட்டும் ரூ.5.85 லட்சம் கோடி செலவிடுகிறது.
ஆயிரக்கணக்கான தொழிலதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். கல்விக்கான அரசு செலவினம் கடந்த 2004ம் ஆண்டில் இருந்த 3.2 சதவீதத்தில் இருந்து 2026ம் ஆண்டில் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகள், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இளைஞர்களின் போராட்டத்திற்கு முக்கியக் காரணம்’ என்று ராஜ் தாக்கரே கூறினார்.
