×

உண்மை, நீதி, மன்னிப்பை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கே உள்ளது: ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: “மாணவர்களுக்கு உண்மை, நீதி, மன்னிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கே உள்ளது” என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தபோது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மறுதேர்வு நடத்தப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட கோபிகா, ரோஷிணி மற்றும் வெற்றி ஆனந்தன் ஆகியோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதுதொடர்பான காணொலியை தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “தமிழ்நாடு பயணத்தின்போது நீட் தேர்வு விவகாரத்தில் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட கோபிகா, ரோஷிணி, வெற்றி ஆனந்தன் ஆகிய மூன்று இளம் மருத்துவ கனவுடைய மாணவர்களின் குடும்பத்தினரை நான் சந்தித்தேன். ஒவ்வொரு குடும்பமும் ஒரே வேதனையான கேள்வியையே முன்வைத்தன. அது, நேர்மையான, கடின உழைப்பாளிகளான மாணவர்கள் ஏன் ஒரு நேர்மையற்ற அமைப்பின் விளைவுகளுக்கு விலை கொடுக்க வேண்டும்? என்பதுதான்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, கட்டாய மறுதேர்வு நடத்தப்பட்டது இளம் மனங்களின் மீது தாங்க முடியாத மன அழுத்தத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு புள்ளிவிவரத்துக்கு பின்னாலும் ஒரு கனவுள்ள குழந்தையும், ஈடு செய்ய முடியாத இழப்புடன் வாழும் ஒரு குடும்பமும் உள்ளன. கடின உழைப்பு மதிக்கப்படும், தேர்வுகள் நியாயமாக நடத்தப்படும் மற்றும் கல்வி நிறுவனங்களின் தோல்வியால் எந்த மாணவரும் தற்கொலை போன்ற விளிம்பு நிலைக்கு தள்ளப்படாத ஒரு கல்வி முறைக்காகவே எங்கள் போராட்டம் அமைகிறது.

பிரதமர் மோடி மாணவர்களை மன்னிப்பது பற்றி பேசுகிறார். இந்த பெற்றோர்களின் கருத்துகளை கேட்ட பிறகு எனது நம்பிக்கை இன்னும் வலுவடைந்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு மோடியின் எந்த மன்னிப்பும் தேவையில்லை. அரசாங்கம்தான் அவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் பகிரங்க மன்னிப்பு ஆகியவற்றை வழங்க கடமைப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Congress ,president ,Lok Sabha ,Opposition ,Tamil Nadu ,NEET ,
× RELATED கனமழையால் ஆறுகளில்...