×

இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை போதைப்பொருள் பயன்பாடு வாழ்க்கையை சீரழித்து விடும்

புதுடெல்லி: ‘போதைப் பொருள் தற்காலிக உற்சாகத்தை அளித்தாலும், அது ஒட்டுமொத்த வாழ்க்கையை சீரழித்து விடும்’ என்ற பிரதமர் மோடி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொண்டார். ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்’ என்ற உறுதிமொழி பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இளைஞர்களே நம் நாட்டின் எதிர்காலம் என்பது எதிரி நாடுகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் பயங்கரவாதத் திட்டங்களின் ஒரு பகுதியாக போதைப்பொருள் விநியோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். போதைப்பொருள் சிறிது காலத்திற்கு உற்சாகத்தை அளிக்கலாம். ஆனால் அது உங்கள் ஒட்டுமொத்த தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும். போதைக்கு அடிமையானவர்களை சமூகம் ஒதுக்கக் கூடாது. அவர்களை மதித்து அரவணைத்து மறுவாழ்வுக்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.

போதை அடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருபவர்கள் போராளிகள். சமூகம் அவர்களைக் கவுரவிக்க வேண்டும்.  வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நாடு நிர்ணயித்துள்ள நிலையில், இளைஞர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கத் தீங்கான போதைப் பழக்கங்களிலிருந்து விலகி இருப்பது அவசியம். இதுவே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்.

போதை அடிமைத்தனத்தின் ஆபத்துகளை இளைஞர்கள் புரிந்துகொள்வதையும், எல்லா வகையிலும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதையும் உறுதிசெய்ய அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இன்று எடுக்கப்பட்ட இந்த உறுதிமொழி அடுத்த 100 வாரங்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கலை, கலாச்சாரம், விளையாட்டு, தியானம், ஆன்மீகம் மற்றும் சமூக சேவை தொடர்பான செயல்பாடுகள் ஏற்பாடு செய்யப்படும். போதைப்பொருள் ஒழிப்பு குறித்த செய்தி புதிய மக்களைச் சென்றடையும்.

வரவிருக்கும் 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய 100 வலுவான நடவடிக்கைகளாக அமையும். போதைப்பொருள் பழக்கம் உடலுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், ஒரு தாயின் புன்னகையைப் பறித்து, தந்தையின் கனவுகளைச் சிதைத்து, சகோதரியின் நம்பிக்கையைத் தளர்த்தி, தம்பியின் மரியாதையையும் இழக்கச் செய்கிறது.

தங்கள் கண்முன்னே தங்கள் பிள்ளைகள் படிப்படியாகத் தங்களை இழந்து வருவதைப் பார்க்கும் குடும்பத்தினர், ஒவ்வொரு நாளும் இந்த வேதனையுடனேயே வாழ்கிறார்கள். போதைப்பொருளுக்கு எதிரான இந்த இயக்கத்தில் இளைஞர்களுடன் அரசு உறுதியாக நிற்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Tags : PM Modi ,New Delhi ,Modi ,
× RELATED அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.25,000...