×

தமிழகத்தில் 15,000 வழக்குகள் நிலுவை; நாடு முழுவதும் 3.96 லட்சம் போதைபொருள் வழக்குகள் தேக்கம்: சிறப்பு நீதிமன்றங்களை உடனே அமைக்க மாநிலங்களுக்கு உத்தரவு

புதுடெல்லி: நாட்டில் போதைப்பொருள் வழக்குகள் 3.96 லட்சம் நிலுவையில் உள்ள நிலையில், சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்குமாறு மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுமார் 3.96 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள சூழ்நிலையில், அவற்றை விரைந்து விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதுதொடர்பான தரவுகளில், கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 1,73,000 போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,95,000 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை இந்த வழக்குகள் 8,75,000 ஆக உயர்ந்து 10,97,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 22 மாநிலங்களில் இதுவரை போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த 6 மாதங்களில் இது தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் 60,000 வழக்குகள் நிலுவையில் இருந்தும் சிறப்பு நீதிமன்றங்கள் எதுவும் இல்லை என்பதால், லூதியானா, ஜலந்தர், அமிர்தசரஸ், தரன் தரன் மற்றும் சங்கரூர் ஆகிய இடங்களில் 5 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல 50,000 வழக்குகள் நிலுவையில் உள்ள கேரளாவில் 2 நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

தமிழகத்தில் 15,000 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 5 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே செயல்படுவதாகவும், மேலும் 6 நீதிமன்றங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் 15,000 வழக்குகளுக்கு 3 நீதிமன்றங்களும், ஒடிசாவில் 17,000 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 14,000 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 11,000 வழக்குகளும், இமாச்சல பிரதேசத்தில் 11,000 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. நாடு முழுவதும் தற்போது வெறும் 65 சிறப்பு நீதிமன்றங்கள் மட்டுமே பிரத்யேகமாக இயங்கி வருகின்றன என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இழந்த செல்வாக்கை மீட்க பிரதமர் மோடி முயற்சி;
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேர்வு முறைகேடு போராட்டங்கள் காரணமாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய நேரிட்ட நிலையில், இளைஞர்களின் ஆதரவை மீண்டும் பெற பிரதமர் மோடி புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பிரசாரத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ‘நாட்டிற்கு உங்கள் ஆற்றலும் திறமையும் தேவை. 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடையப்போவது நீங்கள்தான். அடுத்த 100 ஞாயிற்றுக்கிழமைகளும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய வலுவான அடிகளாக மாறும்’ என்று கூறினார். இந்த நிகழ்வில் நாடு முழுவதும் 28,000 இடங்களில் இருந்து 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர்களைத் தொடர்ந்து தொடர்புகொண்டு வரும் பிரதமர் மோடி, போராட்டத்தின் போது தமக்கு எதிராக முழக்கமிட்டவர்களை மன்னிப்பதாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், பிரதமருக்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறப்படும் நொய்டாவைச் சேர்ந்த ருசிகா சிங் என்ற பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் பலாத்கார மிரட்டல்கள் வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : Tamil Nadu ,New Delhi ,Union Home Ministry ,
× RELATED எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தால்...