×

வருவாய் பிரிவு ஊழியரின் ‘அடாவடி’ சேலம் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு: கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?

 

சேலம், ஜூலை 31: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகள் மூலமாக கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் விக்டோரியா வணிக வளாக வாகன நிறுத்த ஸ்டாண்டில் 32 மற்றும் 33வது வார்டு வரி வசூலாளர்களான துரைராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் வசூல் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆனந்தா பாலம் மல்டிலெவல் பார்க்கிங் பகுதியில் 9 மற்றும் 10வது வார்டு வரி வசூலாளர்கள் சண்முகசுந்தரம், கணபதி, போஸ் மைதானம் வாகன நிறுத்துமிடத்தில் 36வது வார்டு வரி வசூலாளர் கணபதி, வ.உ.சி மார்க்கெட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் 35, 39, 40 வது வார்டு வரி வசூலாளர்கள் சந்தோஷ், குமரன், ராமலிங்கம் ஆகியோர் அம்மாபேட்டை மண்டல உதவி கமிஷனர் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் இங்கு வரி வசூல் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் மாநகராட்சி வருவாய் பிரிவை சேர்ந்த ஒருவர் தன்னிச்சையாக சிலரை நியமித்து அவர்கள் மூலம் வாகன கட்டணம், சுங்க வசூல் உள்ளிட்டவற்றை வசூல் செய்து வருகிறார்.

மேலும், மாநகராட்சி வரி வசூலாளர்கள் வசூலுக்கு சென்றால் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையில் வசூல் பணியில் ஈடுபட்டு வரும் அந்த நபரால் மாநகராட்சிக்கு லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு புகார்கள் சென்றுள்ளன. அந்த புகார்களின் மீது கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி
எழுந்துள்ளது.

Tags : Salem Corporation ,Salem ,
× RELATED ஆடி பண்டிகையையொட்டி தேவை அதிகரிப்பு;...