×

சேலம் நூலக கட்டுமான பணியில் 3வது மாடியில் இருந்து விழுந்து மேற்குவங்க தொழிலாளி பலி

 

சேலம், ஜூலை 31: சேலம் அஸ்தம்பட்டியில் நூலக கட்டுமான பணியில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து மேற்குவங்க தொழிலாளி பலியானார். சேலம் அஸ்தம்பட்டி மத்திய சிறை அருகே தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.91.90 கோடியில் பிரமாண்டமான பாரதிதாசன் அறிவுலகம் என்னும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் டெண்டர் எடுத்துள்ள ஒப்பந்த நிறுவனத்தின் கட்டிட தொழிலாளர்கள், இந்த நூலக கட்டுமான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், மேற்குவங்கம் மாநிலம் புர்பாமேதினிபூர் பகுதியை சேர்ந்த நேதாய் காதுவா (43) என்ற கட்டுமான தொழிலாளி, நேற்று முன்தினம் 3வது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென கால் தவறி, மேலே இருந்து கீழே விழுந்தார்.

இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த நேதாய் காதுவாவை அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேதாய் காதுவா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையிலான போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தனர். பின்னர், இறந்த தொழிலாளியின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Salem ,SALEM ASTHAMBATI ,Bharatithasan ,Tamil Nadu government ,Salem Asthampati Central Prison ,
× RELATED ஆடி பண்டிகையையொட்டி தேவை அதிகரிப்பு;...