சின்னசேலம், ஜூலை 31: ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று நடந்த வார சந்தையில் சுமார் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாகின. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் வார சந்தை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த சந்தையில் இறைச்சி மற்றும் வளர்ப்புக்கான ஆடு, மாடுகள், நிலத்தில் விளைந்த காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். இந்த வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். அப்போது சின்னசேலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் சந்தைக்கு வந்து தேவையான காய்கறிகளை வாங்கி செல்வர்.
மேலும் ஆடி பதினெட்டு, தீபாவளி, பொங்கல் கரிநாள், பக்ரீத், ரம்ஜான் போன்ற விழா காலங்களில் இறைச்சிக்காக சேலம், ஈரோடு, பெரம்பலூர் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி மினி லாரிகளில் ஏற்றி செல்வது வழக்கம்.
அதேபோல வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ள ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று நடந்த வாரசந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடுகளை சேலம், ஈரோடு, கோவை, கடலூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும், சின்னசேலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகளை வாங்கி சென்றனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமார் ரூ.50 லட்சத்துக்குமேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
