×

பண்ருட்டியில் நள்ளிரவில் பரபரப்பு: அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ விபத்து

 

பண்ருட்டி, ஆக. 3: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், கும்பகோணம் செல்லும் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பணிமனை வளாகத்தில் மலையை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த பழைய உதிரி பாகங்கள், பயன்படுத்தப்பட்ட ஆயில் பில்டர்கள், டீசல் பில்டர்கள் குவியலில் திடீரென தீப்பிடித்தது. பில்டர்களில் இருந்த ஆயில் மற்றும் டீசல் காரணமாக தீ வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமானது.

தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் தலைமையில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி தீ பேருந்துகளுக்கும், பணிமனை கட்டிடங்களுக்கும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகராட்சியில் இருந்து பொக்லைன் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீ யை அணைப்பதற்கான தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் குவித்து வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள பழைய பேருந்து உதிரி பாகங்கள் மற்றும் கழிவு பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இங்கு இது போன்ற தீ விபத்து அடிக்கடி நடக்கிறது.

கடந்த ஆண்டு 3 பேருந்துகள் எரிந்து நாசமானது. பணிமனையில் தீயை அணைக்க தேவையான தண்ணீர் வசதி கூட இல்லை. இதனால் தண்ணீர் தீர்ந்ததும் தீயணைப்பு வாகனங்கள் மீண்டும் நிலையத்திற்கு சென்று நீர் நிரப்பி வந்து தீயை அணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. ஆனால் பணிமனையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Panruti ,State Transport Corporation ,Taluk Office ,Kumbakonam ,Panruti, Cuddalore district ,
× RELATED தனது மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி...