சிவகங்கை மாவட்டம். திருப்பாச்சேத்தி அருகே மாத்தூரை சேர்ந்தவர் ஊர்க்காவலன்(32). ‘ஏ’ ப்ளஸ் சரித்திரப்பதிவேடு ரவுடியான இவரை வழக்கு ஒன்றில் கடந்த மார்ச் 7ம் தேதி போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்து சிகிச்சைக்கு பின் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் கடலூர் சிறையிலிருந்து ஜாமீனில் வந்த ஊர்க்காவலன், மாத்தூரில் வீடு கட்டி வந்தார். நேற்று காலை வீட்டு வாசலில் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படை காமராஜர் நகரை சேர்ந்தவர் சம்பூரணம் (75). இவரது வீட்டில் நேற்று காலை டூவீலரில் வந்த இருவர் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, 5 பவுன் செயினை பறித்துள்ளனர். வெளியில் சென்றிருந்த அவரது மகன் சுப்பிரமணியம் வரவே அவரையும் வெட்டிவிட்டு தப்பினர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த புத்தூர் ஊராட்சி மும்மாச்சி ரெட்டியப்பட்டியை சேர்ந்தவர் பாப்பம்மாள் (80). மகள் மஞ்சுளாவுடன் நேற்று முன்தினம் இரவு தனியாக இருந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் புகுந்து பாப்பம்மாளை வெட்டி கொலை செய்தனர். கத்திக்குத்து காயங்களுடன் மகள் மஞ்சுளா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (23). தேங்காய் குடோனில் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை சஞ்சய்குமார் லாரியில் தேங்காய் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென சஞ்சய் குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காடுபட்டி போலீசார் தென்கரையை சேர்ந்த முத்தீஸ்வரன் (21), சரவணப்பெருமாள் (24), விக்னேஷ்வரன் (25) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன் ராமநாதபுரத்தில், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு தெரிய வந்தததால் மனைவியையும், தடுக்க முயன்ற மாமியாரையும் கணவர் வெட்டி கொலை செய்ததையும் சேர்த்து ஒரே நாளில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
