×

பழனி தண்டாயுதபாணி கோவில் நில மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான மடத்திற்கு ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை, தனிநபர்கள் இருவருக்கு ரூ.2 கோடி என மதிப்பிட்டுப் பத்திரப்பதிவு செய்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பான வழக்கில் பத்திரப்பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், பழனி காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை நேற்று கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில், சிபிசிஐடி போலீசாரின் நிலைப்பாடு சரியில்லை; மாநிலக் காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் உண்மையை கண்டறிய முடியாது. குறிப்பாக, இரு துறைகளின் அமைச்சர்களும் இதில் முன்னுக்குப் பின் முரணாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளனர். எனவே, இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பழனி நகராட்சியின் மாமன்றத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, மூத்த வழக்கறிஞர்கள் ரவீந்திரன் மற்றும் வீர கதிரவன் ஆஜராகிக் கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

குறிப்பாக, சிபிசிஐடி போலீசார் இதுவரை குற்றவாளிகளை முறையாகக் கைது செய்யவில்லை. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், நேற்றைய தினம் அவசர அவசரமாக 4 நபர்களைக் கைது செய்துள்ளனர். இதுவே இவர்களது விசாரணை மீதான சந்தேகத்திற்கு முன்னுதாரணமாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான் உண்மை வெளியே வரும். இதுமட்டுமல்லாமல், சார்பதிவாளர் அலுவலகப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தையும் போலியாகப் பதிவு செய்துள்ளனர். அது நேற்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது” என்று வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்திற்கு அரசியல் கட்சிகள் அரசியல் சாயம் பூசப் பார்க்கின்றன. நாங்கள் நேர்மையாக விசாரணை நடத்தி வருகிறோம்; வழக்குப்பதிவு செய்துள்ளோம், கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், எதுவாயினும், இந்த வழக்கை பொறுத்தவரை சிபிசிஐடி போலீசார் எத்தனை பேரை வழக்கில் சேர்த்துள்ளனர், எத்தனை நபர்களைக் கைது செய்துள்ளனர்? இதுவரை நீங்கள் என்ன விசாரணை செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்பது குறித்த நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள். அதன் பிறகே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதா அல்லது சிபிசிஐடி விசாரணை போதுமானதா என்பதை நாங்கள் முடிவு செய்வோம். எனவே, சிபிசிஐடி போலீசார் முழுமையான இடைக்கால நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags : PALANI DANDAYUDAPANI TEMPLE ,MADURAI ,BRANCH ,CBCID ,Palani Dandayudapani Swami Temple ,Supreme Court ,
× RELATED மசினகுடி- தெப்பக்காடு சாலையோரம்...