திருக்காளஹஸ்தி (வாயு ஸ்தலம்)
அருணகிரிநாதர் பாடி அருளியுள்ள பஞ்சபூதத் தலங்களுள் வாயுத் தலமாகக் கருதப்படும், திருக்காளஹஸ்தி திருத்தலம்பற்றி இனிக் காண்போம். இங்குள்ள காளத்தீஸ்வரர் திருக்கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழமையான கோயில்; சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக்கோயில் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொன்முகலி நதிக்கரையில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் இறைவி ஞானப்பிரஸூனாம்பிகை எனப்படும் ஞானப்பூங்கோதை.
‘தெலுங்கு’ எனும் சொல்லுக்கு மூல பதமான, ‘த்ரிலிங்க’ என்ற வடமொழிச் சொல்லால் குறிக்கப்படும் மூன்று சிவலிங்கங்களுள் ஒன்று காளஹஸ்தியிலுள்ளது. வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த பல போட்டி யில் ஆதிசேஷன் தனது படத்தால் மூடியிருந்த கயிலைக் கொடுமுடிகளுள் மூன்று சிகரங்களை வாயு அடித்துத் தள்ளியது. அவற்றுள் ஒன்று திருக்காளத்தி. தட்சிண கயிலாயம் என்று கூறும் சிறப்புடையது.
தலப்பெருமையைக் கருணைப் பிரகாச சுவாமிகள், சிவப்பிரகாச சுவாமிகள், வேலப்ப தேசிகர் மூவரும் தாம் இயற்றியுள்ள சீகாளத்திப் புராணத்தில் போற்றிப் பாடியுள்ளனர். “ஸ்ரீகாளஹஸ்தி” என்பது, தமிழில் “சீகாளத்தி” என வழங்கப்படுகிறது. ஸ்ரீஎனும் வடமொழிச் சொல், தமிழில் வழங்கும் பொழுது, “திரு” என்று ஆகும். தலச் சிறப்பைப் பொதுவகையில் உணர்த்தும் “திரு” என்பது அடைமொழியாகுமே தவிர, ‘சிலந்தி’ என்ற பொருளைக் குறிப்பதாக ஆகாது. “சீ” என்ற சொல்லிற்கு எந்த நிகண்டிலும் ‘சிலந்தி’ என்ற பொருள் தரப்படவில்லை என்பது ஆராய்ச்சியாளர் வித்துவான் சு.பாலசாரநாதன் அவர்கள் கருத்து. சிலந்தி – காளம் (பாம்பு) – யானை எனும் மூன்றும் பூசித்து முக்தி அடைந்த தலம் தான் இது. ஆனால், ‘சீ’ என்பதற்குச் சிலந்தி என்று பொருள் கொள்வது தவறு என்பது அவர் குறிப்பு.
ஊருள் மிக உயர்ந்து, ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருவது காளி கோபுரம். கி.பி. 1516 ஆம் ஆண்டு இக்கோபுரம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. ஆயின், கோயிலின் பிரதான வாயிலில் உள்ள ‘பிக்ஷசாலா’ கோபுரமும் ஏனைய கோபுரங்களும் 12 ஆம் நூற்றாண்டில் வீர நரசிம்ம யாதவராயரால் கட்டப்பட்டவையாகும். கோபுர வாயிலில் துவார கணபதியும், தண்டபாணியும் உள்ளனர். உள்ளே நுழைந்ததும் வலப்புறம் வள்ளி தெய்வயானையுடன் சுப்ரமணியர் தனிக்கோயிலில் காட்சி அளிக்கிறார். இங்கு ஒரு காளத்தித் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.
“சிரத்தானத்தில் பணியாதே
செகத்தோர் பற்றைக் குறியாதே
வருத்தா மற்றொப்பிலதான
மலர்த்தாள் வைத்தெத்தனை ஆள்வாய்
நிருத்தா கர்த்தத்துவ நேயா
நினைத்தார் சித்தத்துறைவோனே
திருத்தாள் முத்தர்க்கருள்வோனே
திருக்காளத்திப் பெருமாளே
[தலை கொண்டு உன்னையன்றி வேறு ஒருவரையும் பணியாமலும், உலக ஆசைகளில் அகப்படாமலும் நான் உய்யுமாறு, நீ என்னை வரவழைத்து ஏற்றுக்கொண்டு, நிகரற்ற மலர் போன்ற உன் திருவடிகளில் சேர்த்து வஞ்சகனாகிய என்னை ஆண்டருள்வாயாக. நடனத்தில் வல்லவனே! கடவுளர்களுள் தலைமைத்தானம் வகிக்கும் அன்பனே! உன்னை நினைப்பார் சித்தத்தில் வீற்றிருப்பவனே! ஆசைகளை முற்றும் துறந்தவர்களுக்கு தன் திருத்தாளை அளிப்பவனே! திருக்காளத்தியில் வீற்றிருக்கும் பெருமையனே!] அருகில் விநாயகர், பால ஞானாம்பாள், பஞ்சமுகேஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.
சுவாமி புறப்பாடு நிகழும் வடக்கு கோபுர வாயில் வழியாகச் செல்லும் பொழுது, இடப்புறம் 35 அடி ஆழத்தில் பாதாள விநாயகர் காட்சி அளிக்கிறார். இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமல் சென்றதால், பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியதாம். அகத்தியர் தம் தவற்றிற்குப் பிராயச்சித்தமாக பொன்முகலி ஆற்றின் மட்டத்தில் இவ்விநாயகரைப் பிரதிஷ்டை செய்ததாகக் கேள்விப்படுகிறோம்.
எதிரில் சிவராத்திரி மண்டபம் உள்ளது. அடுத்து மூலையில் இரண்டு தூண்களை வெளியே நிறுத்திச் சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாக உள்ளதைக் காணலாம். உற்றுக் கவனித்தால் மட்டுமே இவ்வமைப்பைப் புரிந்துகொள்ள முடியும். “காளத்தி சென்று வந்தேன்” என்று சொன்னால், “இரண்டு கால் மண்டபம் பார்த்தாயா?” என்று கேட்கும் வழக்கம் உள்ளது என்பார், ‘திருமுறைத் தலங்கள்’ நூல் ஆசிரியர் பு.ம.ஜெயசெந்தில்நாதன் அவர்கள்.
திருமஞ்சன கோபுரம், அஷ்டோத்தர லிங்க சந்நதி, பஞ்ச சந்தி விநாயகர் சந்நிதி இவற்றைத் தரிசித்து வரும் போது, நூற்றுக் கால் மண்டபம், பதினாறு கால் மண்டபம் இவற்றையும் காணலாம். பலிபீடமும் நந்தியும் அருகருகே உள்ளன. தெற்கு நோக்கிய தட்சிண கோபுரவாயில் வழியே நுழைந்தால், தட்சிணாமூர்த்தி, சங்கல்ப கணபதி மற்றும் நால்வரைத் தரிசிக்கலாம். இங்குள்ள தீர்த்தக் கிணறு, ‘சரஸ்வதி தீர்த்தம்’ எனப் படும். வாய் பேச வராத குழந்தைகளுக்கு இத்தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.இடப்புறம் செங்கல்வராயன் [ஆறுமுகன்] வள்ளி தெய்வயானையுடன் காட்சி தருகிறார். அருணகிரியார், தனக்கு சிவஞானம் கிட்ட பொற்கழல் தருமாறு கேட்கும் ஒரு காளத்தி திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
“சரக்கேறித்தப் பதிவாழ் தொந்தப்
பரிக்காயத்திற் பரிவோடைந்துச்
சதிக்காரர்ப்புக்குலை மேவிந்தச் செயல்மேவிச்
சலித்தே மெத்தச் சமுசாரம் பொற்
சுகித்தே சுற்றத்தவரோடின்பத்
தழைத்தே மெச்சத் தயவோடிந்தக் குடிபேணிக்
குரக்கோணத்திற் கழுநாயுண்பக்
குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப்
படுவேனைக்
குறித்தே முத்திக்கு மறா இன்பத்
தடத்தே பற்றிச் சகமாயம் பொய்க்
குலக்கால் வற்றச் சிவஞானம் பொற்
கழல்தாராய்”
[பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழும் தொடர்புடைய இவ்வுடம்பில் அன்பு பூண்டவர் போன்ற ஐம்பொறிகளாகிய மோசக்காரர்கள், உள்ளே புகுந்து, அழிவுக்குரிய செயல்களை மேற்கொள்கிறார்கள். இச் செயல்களையும் இந்த வாழ்வையும் விரும்பி, நான் மூவாசைகளுடனும் சுற்றத்தாருடனும் சுகத்தை அனுபவித்து, பின்னர் கழுகும் நாயும் உண்ணக் குழியில் வைக்கப்பட்டு, பிணமாய்க் கெடுகின்ற அடியேனை குறியாகக் கொண்டு, முத்தி மார்க்கத்தைக் காட்டி, உலக மாயை, பொய், குலம், குடி முதலான பற்றுகள் வற்றிப் போக, சிவஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. [சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரிகம் – கந்தர் அலங்காரம்: சிவஞானம் எனும் மெய்ஞ்ஞானம் வந்தாலன்றி அஞ்ஞான மலமாயை அகலாது என்பதையே அருணகிரியார் இவ்வாறு தெரிவிக்கிறார் போலும்!].
பாடலின் பிற்பகுதியில் சிவனாரது பெருமைகள், சூரசம்ஹாரம் இவைபற்றியும், காட்டில் யானையாக வந்து பயமுறுத்திய விநாயகரைக் கண்டு வள்ளி நடுங்கிய போது, “இந்தச் சீர் விளங்கும் யானைக்கு அஞ்சி நீ அழாதே வா” என்று முருகன் அழைத்தது பற்றிய குறிப்புகளும் வந்துள்ளன. ஞானமும் அழகும் மிக்க திருக்காளத்தியில் வாழ்கின்ற கந்தவேளாம் பெருமையனே! சிவகதி எனும் பெரும் பேற்றினை அடையும் பொருட்டு, கடையவனாகிய சிறியேனுக்குச் சிறப்பினை வழங்கி ஏற்றுக்கொள்வாயாக என்றும் வேண்டுகிறார்.
“புரக்காடற்றுப் பொடியாய் மங்கக்
கழைச்சாபத்து ஐச் சடலானுங்கப்
புகைத் தீ பற்று அப் புகலோர் அன்புற்று அருள்வோனே
புடைத்தே எட்டுத் திசையோர் அஞ்சத்
தனிக்கோலத்துப் புகு சூர் மங்கப்
புகழ்ப்போர் சத்திக்கிரை ஆநந்தத்து அருள்வோனே
திருக்கானத்திற் பரிவோடந்தக்
குறக்கோலத்துச் செயலாள் அஞ்சத்
திகழ்ச் சீர் அத்திக்கு அழல் வா என்பப் புணர்வோனே
சிவப்பேறுக்குக் கடையேன் வந்து உட்
புகச் சீர் வைத்துக்கொளு ஞானம் பொன்
திருக்காளத்திப் பதிவாழ்
கந்தப் பெருமாளே”
“ஞானம் பொன் திருக்காளத்திப் பதி” என்பதற்கேற்ப ஞான சொரூபியான ஞானப் பூங்கோதை அம்மை இத்தலத்தில் அருள்பாலிக்கிறாள்.உற்சவ அலங்கார மண்டபத்தில் ஏராளமான உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சுந்தர கணபதி, மோட்ச கணபதி, பால கணபதி ஆகியோரை வணங்கி, மூலவரைத் தரிசிக்கச் செல்கிறோம். கவசமிட்ட கொடி மரம், பலி பீடம் வணங்கி உள்ளே செல்லலாம். எதிரிலுள்ள சுவரில் சாளரம் உள்ளது. சிவலிங்கத் திருமேனி அற்புத அமைப்புடையது. சுயம்பு லிங்கம். ஆவுடையார், பின்னால் கட்டப்பட்டது.
சுவாமி மீது தங்கக் கவசம் சார்த்தப்பட்டு பட்டைகளாகத் தெரிகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி. கவசத்தைச் சார்த்தும் போதும், எடுக்கும் போதும் அவர் மீது கரம் படக்கூடாது. பச்சைக் கற்பூரம் சேர்ந்த நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. திருநீற்றுடன் பக்தர்களுக்கு இவ்வபிஷேக தீர்த்தமும் அளிக்கப்படுகிறது. கவசத்தில் 27 நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. மிகவும் உயரமான லிங்கம்.
மூலலிங்கத்தின் அடிப்பாகத்தில், சிலந்தி வடிவமும், மத்தியில் யானையின் இரு தந்தங்களும், மேற்புறத்தில் ஐந்து தலை பாம்பு வடிவமும், வலப்பால் கண்ணப்பன் கண் அப்பிய வடிவும் அழகுற அமைந்துள்ளன. லிங்கத்தின் மேற்புறம், ஐந்து தலை நாகம் போலவே காட்சி தருகிறது. மூலலிங்கம் அருகே, கீழே, காளத்தீஸ்வரரின் போகத் திருமேனி உள்ளது. மான், மழு ஏந்தி அபய ஹஸ்த முத்திரையுடன் விளங்குகிறது.
கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் காற்றில் அசைந்த வண்ணம் இது வாயுத்தலம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இங்கு பட்டினத்தாரின் அழகிய பாடல் நினைவுக்கு வருகிறது.
“வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேனல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேனல்லன்; தொண்டு செய்து
நாளாறில் கண் இடந்து அப்ப வல்லேனல்லன்; நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பனுக்கே.”
[வாளால் மகவரிந்து ஊட்டியவர் – சிறுத்தொண்ட நாயனார்
மாது சொன்ன சூளால் இளமை துறந்தவர் – திருநீலகண்ட நாயனார்
தொண்டு செய்து நாளாறில் கண் இடந்து அளித்தவர் – கண்ணப்ப நாயனார்]
காளஹஸ்தியில் சிலந்தி, பாம்பு, யானை போன்ற பிராணிகளும், கண்ணப்ப நாயனாரும் பூஜை செய்து முக்தி அடைந்த வரலாற்றைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
சிலந்தி வழிபட்டது:
நான்முகனுடைய மகன் மாதவ ஊறன் என்பவன் தந்தையைப் போலவே தானும் படைப்புத் தொழிலில் மிக வல்லவன் என அகந்தையுற்றான். அவனது செருக்கை அடக்க, ‘சிறிய நூலை இழைக்கின்ற சிலந்தியாகத் தோன்றுவாயாக” என்று சபித்தான் நான்முகன். மகன் அதிர்ந்து போய், தந்தையிடம் கண்ணீர் பெருக மன்னிப்பு கேட்டான். “வேழவனம், வில்வவனம் என்றெல்லாம் அழைக்கப்படும் திருக்காளத்தி சென்று, இறைவனை அர்ச்சித்து நற்கதி பெறுவாயாக” என்றான் பிரமன். அதன்படி திருக்காளத்தி வந்தடைந்த சிலந்தி, தென்கயிலாயத் தெய்வத்திற்கு ஆலயம் இல்லாதிருப்பதைக் கண்டு, தொடர்ந்து பல நாட்கள் இளைப்பாறவும் செய்யாமல் நூலிழையால் பந்தல் அமைத்து வந்தது.
சிலந்தியின் விடாமுயற்சியை உலகறியச் செய்ய திருவுளம் கொண்ட பெருமான், விளக்குச்சுடரைத் தூண்டிவிட, சிலந்தி நூலால் அமைந்த கோயில் தீப்பற்றி எரிந்து போயிற்று. ‘தீயினால் அழிவதற்கோ திருக்கோயில் செய்தேன் நான்’ என்று வருந்திய சிலந்தி, நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தது. சிலந்தியின் திருத்தொண்டின் சிறப்பும், தன் மீது வைத்த அன்பும் கண்டு மகிழ்ந்த இறைவன், அதன் விருப்பப்படியே தன் திருவடிக் கீழ் அதை வைத்துக் கொண்டார்.
சித்ரா மூர்த்தி
