×

ஆடிப் பெருக்கு தாலிப் பெருக்கு

ஆடி பதினெட்டாம் பெருக்கு தமிழகப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் பிரதிபிம்பமான விழா. உலகத்துக்கு அச்சாணியாக விளங்குகின்ற நீர் நிலைகளில் ஒன்றான ஆறுகளில் புதுநீர் பெருக்கெடுத்து ஓடும். அதனால் பச்சைப் பயிர்கள் நன்கு விளையும். அந்த ஆறுகளையும் ஆறுகளில் ஓடும் நீரையும் தெய் வமாக நினைத்துக் கொண்டாடி மகிழும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடிப் பெருக்கு திருநாளன்று பெண்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ஆறு, கால்வாய் முதலிய நீர் நிலைகளுக்குச் சென்று, அந்த நீருக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து வாழை இலையில் படையல் இட்டு, தேங்காய் உடைத்து, கற்பூர தூபதீபங்கள் காட்டி,புது அரிசி வெல்லம் கலந்து வைத்து சித்ரான்னங்களைப் படைத்து, குதூகலமாகக் கொண்டாடுவது உண்டு. அன்று நீர்நிலைகளுக்கு சீர் செய்வார்கள்.

வாழைமட்டையில் அகல்விளக்குகளை ஏற்றி நீரில் விடுவதும் சில இடங்களில் நடைபெறும். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அன்று தாலிக் கயிறு மாற்றிக் கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்களும் திருமணமான பெண்களிடம் இருந்து வாங்கி மஞ்சள் சரடு அணிவதன் மூலமாக அவர்களுக்கும் மிக விரைவில் திருமணம் ஆகும். ஆறு, குளம் முதலியன, அருகே இல்லாதவர்கள் தங்கள் வீட்டில் போர்வெல் அல்லது அடி பம்பு இருந்தால் அந்தக் குழாயடியிலும் பூஜையைச் செய்யலாம். அல்லது ஒரு சிறு குடத்தில் தண்ணீர் எடுத்து அதில் அரைத்த மஞ்சளைக் கரைத்து வைத்து படைக்கலாம்.

விளக்கேற்றி வைத்து, குடத்தண்ணீரில் பூக்களைப்போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்ட வேண்டும். அந்த நீரையே புண்ணிய நதிகளாக நினைத்துக் கொண்டு மந் திரத்தைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்தவுடன் அந்த நதி நீரை கால் படாத வண்ணம் செடி கொடிகளுக்கு ஊற்றி விட வேண்டும். திருவரங்கத்தின் புகழ்பெற்ற அம்மா மண்டபம் என்கின்ற படித்துறை உள்ளது. அங்கே காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் பெரிய கோயிலில் இருந்து நம்பெருமாள் யானை மீது புறப்பாடாவார். அம்மா மண்டபம் படித்துறைக்கு வருவார். அங்கு காவிரி நீரால் சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும் .அங்கே மாலை வரை பெருமாள் வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமான தாலிக்கயிறு, பட்டு மற்றும் மங்களப் பொருள்கள் ஆற்றில் விடப்படும்.

இந்த நிலவுலகம் உயிரோடு இருப்பதற்கு காரணம் நதிகள். ‘‘நீரின்றி அமையாது உலகு’’ என்றார் வள்ளுவப் பெருந்தகை. உலகத்தில் உள்ள அத்தனை நாகரிகங்களும், நதிக்கரையில் தான் தோன்றின. நம்முடைய பாரததேசத்தைப் பொருத்தவரையில் அதன் ஆன்மிகப் பெருமைக்கும், கலாச்சார சிறப்புக்கும், பண்பாட்டுக்கும் நிலைக்களனாக விளங்குவது, இமயம் முதல் குமரி வரை ஓடும் நதிகள்.

ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம்

திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளை “உபய காவேரி வாசன்” என்பார்கள். உபயம் என்றால் இரண்டு. இரண்டு காவேரிக்கு நடுவில் துயில்கொண்ட பெருமாள் அல்லவா. திருப்பராய்த்துறை அருகே முக்கொம்பில் அகண்ட காவேரி நதியிலிருந்து பிரியும் கொள்ளிட நதியை வடதிருக்காவேரி என்பது வைணவ மரபு.ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் தனிச் சிறப்பு உடையது. ஆடி பதினெட்டு இங்கு வந்து பெருமாளே காவிரிக்கு சீர் செய்வார். அதைப் போலவே பெருமாள் துலா காவேரி திருமஞ்சனம் கண்டருள்வார்.ஸ்ரீ ரங்கத்தில் அம்மா மண்டபத்தில்ஸ்ரீ காவேரித் தாயின் சிலை அற்புதமாக காட்சியளிக்கிறது. திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு அருகில் கருவறையில் காவிரி அன்னையும் கங்கை அன்னையும் காட்சியளிக்கிறார்கள் இப்படி பல கோயில்களில் காவிரி அன்னை காட்சியளிக்கிறாள்.

புராணங்கள் விவரிக்கும் காவிரி திருவுருவம்

காவிரியை புராணங்கள் அற்புதமாக வர்ணிக்கின்றன. காவிரியை பிரம் மன் தன்னுடைய நினைவினால் பெண்ணாகப் படைத்ததால் “பிரம்ம குமாரி” என்பார்கள். வெண்பட்டு உடுத்தி, பத்மாசனத்தில் தாமரை மேல் அமர்ந்திருக்கும் காவிரி தேவி, அபய வரத ஹஸ்த முத்திரையோடு, தாமரை மலரைக் கையில் ஏந்தி, நீர்க் கலசத்தை மற்றொரு கையிலேந்தி, கோடி சூரிய ஒளிகொண்ட திருமுகத்தோடு காட்சி தருவதாக புராணங்கள் விவரிக்கின்றன.

காவேரி மகாத்மியம்

காவிரியின் பெருமையை காவேரி மகாத்மியம் போன்ற நூல்கள் விளக்குகின்றன. காவேரி ரகசியம் என்று ஒரு நூல் உண்டு. அது காவிரி நதியின் பெருமையையும் வரலாற்றையும் மிக விரிவாகச் சொல்கிறது. அதுமட்டுமின்றி யம துதி, விஷ்ணு கவசம், காவேரி தியான ஸ்லோகங்கள், காவேரி அஷ்டோத்தரம் போன்ற பல பகுதிகள் நூலில் இருக்கின்றன. துலா மாதத்தில் காவிரியில் நீராடும் போது கிடைக்கும் பலன்கள், அப்படி நீராடி பலன் பெற்றவர்களின் வரலாறு என பல செய்திகள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கின்றன.

காவேரியா? காவிரியா?

காவேரியா? காவிரியா? இரண்டில் எது சரி. இரண்டுமே தமிழிலக்கியத்தில் கையாளப்பட்டு இருக்கின்றன. ஆனால் வடமொழி நூல்களில் பெரும்பாலும் காவேரி என்கிற பெயர் தான் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகின்றது. காவேரி என்பதற்கு கவேர மன்னனின் மகள் என்று பொருள். பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கலியாண தீர்த்தரூபி, உலோபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லவை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கணபதசாவணி என பல பெயர்கள் உள்ளன.

காவேரி என்றால் பொருள்?

காவிரியில் மூன்று எழுத்துக்கள் இருக்கின்றன. கா+வே+ரி= காவேரி. அதில் கா என்ற எழுத்தில் உள்ள ஆகாரம் பாவங்களின் நிவர்த்தியைத் தெரிவிக்கின்றது. வே என்ற எழுத்தின் ஏகாரம் வேண்டுவதைத் தருகின்ற ஆற்றலைக் காட்டுகின்றது. மூன்றாவது எழுத்தான ர வரிசையில் வரும் ரி மோட்சச் த்தையும் தரவல்லது என்பதைத் தெரிவிக்கின்றது. இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் கா என்றால் சோலைகள் என்று பொருள். விரி என்றால் விரித்துச் செல்லுதல். காவிரி நதி எந்த இடம் எல்லாம் ஓடுகிறதோ அந்த இடங்களெல்லாம் பச்சைப்பசேலென்ற பயிர்களும் பல்வேறு வகைப்பட்ட மரங்களும் சோலைகளும் விரிந்து இருப்பதைச் சொல்வதால் காவிரி என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறது.

பொன்னி நதி

காவிரிக்கு பொன்னிநதி என்ற ஒரு பெயரும் உண்டு. குலசேகர ஆழ்வார், ‘‘திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி” என்று காவிரி நதி தன் அழகிய கரங்களால்ஸ்ரீ ரங்கநாதப்பெருமாள் திருவடியை வருடுகிறது என்று பாடுகின்றார். காவிரியில் கபினி, ஏமாவதி, ஆரங்கி, லட்சுமண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி, பவானி, அமராவதி, நொய்யல், திரு மணிமுத்தாறு துணை ஆறுகள் கலக்கின்றன. இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது.’’பொன்படு நெடுவரை’ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர்.

தேவாரத்தில் காவிரிநதி

பெரும்பாலான சிவாலயங்கள் காவிரி நதிக் கரையிலேயே அமைந்துள்ளன. காவிரியின் வடகரையில் அறுபத்தி மூன்று சிவாலயங்களும் தென்கரையில் 128 சிவாலயங்களும் அமைந்திருக்கின்றன.

‘‘இன்குரல் இசை கெழும் யாழ்
முரலத் தன் கரம் மருவிய சதுரன் நகர்-
பொன்கரை பொரு பழங் காவிரியின்…’

என்று திருஞானசம்பந்தர் காவிரியின் சிறப்பைப் பாடுகின்றார்.

‘‘காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த வரிவண்டு
கவர மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளு மயிலாடுதுறையே!”

காவிரியின் அலைகள் இரு கரைகளிலும் உள்ள சோலைகளில் ரத்தினங்களைச் சிதறடிக்க, அதனால் குரங்குகள் பயந்து குதிக்க, மரக்கிளைகள் மோதுவதால், மாமரத்தில் உள்ள தேன்கூடுகளில் சிதைந்த தேன் சிந்த, அதனை வண்டுகள் விரும்பி உண்ணும் வளம்மிக்க மயிலாடுதுறை என திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.

ஆழ்வார்கள் வாக்கில் காவிரி

வைணவர்களுக்கு கோயில் என்றால் அது திருவரங்கத்தையே குறிக்கும். அது காவிரிக்கரையிலுள்ளது. அத்தனை ஆழ்வார்களும் காவிரி நதியின் சிறப்பை ஏதோ ஒரு வகையில் பாடி இருக்கின்றார்கள். காவிரியை ‘‘சூழ் புனல்’’ என்றும், ‘‘சந்தினோடு மணியும் கொழிக்கும் புனல் காவிரி” என்றும், “மதுவார் புனல் காவிரி” என்றும், “செல்வப் புனல் காவிரி’’ என்றும், ‘‘குலை எடுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன் அலை எடுக்கும் புனல் காவிரி” என்றும், “பொன்னுமா மணியும் முத்தமும் சுமந்த பொருதிரை மா நதி” என்றும், “உலகெலாம் சந்தனமும் அகிலும் கொள்ளசெழும் பொன்னி” என்றும், “பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர்” என்றும், “வார்புனல்” என்றும், “பொன்னி சூழ் அரங்கம்” என்றும் பலப்பல அடைமொழிகளால் காவிரி நதியை ஆழ்வார்கள் போற்றுகின்றார்கள்.

ஸ்ரீ ரங்கநாதரை காவிரி வணங்கும் விதம்

தெய்வத்தை தரிசிக்கச் செல்லும் பொழுதோ, குருவைப் பார்க்கச் செல்லும் பொழுதோ, ஒரு குழந்தையைப் பார்க்க செல்லும் பொழுதோ, ஒரு நோயாளியைப் பார்க்கச் செல்லும் பொழுதோ, வெறும் கையோடு போகக் கூடாது என்பது சாத்திரம். அந்த அடிப்படையில் காவிரி நதியானது திருவரங்கத்தில்ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளின் திருவடியை தொழுவதற்காகப் போகிறது. அப்பொழுது அது வெறும் கையோடு செல்லவில்லை. குடகு மலையிலிருந்து பல மணிகளையும் மணமுள்ள சந்தனம், அகில் போன்ற நறுமணமிக்க பொருள்களையும் கொண்டு வந்துஸ்ரீ ரங்கநாதனுக்குச் சமர்ப்பித்து அவருடைய அடி தொழுகிறது. ‘‘தழுப்பரிய சந்தனங்கள் தடைவரை வாயீர்த்துக்கொண்டு, தெழிப்புடைய காவிரி வந்து அடிதொழும் சீர் அரங்கமே” என்பது பெரியாழ்வார் பாசுரம்.

தீர்த்த பாத்திரத்தின் பெயர் திருக்காவிரி

பெருமாள் திருமஞ்சனத்திற்காக பரிமளங்கள் சேர்த்த ஒரு பெரிய தீர்த்த பாத்திரத்தை வைத்திருப்பார்கள். திருமஞ்சன தீர்த்தம் உள்ள அந்த பாத்திரத்திற்கு திருக்காவேரி என்று பெயர். காரணம் காவிரி நீராட்டத்தை பகவான் விரும்புகின்றார். காவிரியின் மூன்று தீவுகளில் பகவான் சயன கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்.ஸ்ரீ ரங்கப்பட்டணத்தில் உள்ள அரங் கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.

காவிரி அன்னைக்கு கோயில்கள்

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு புதிய நீர் வரும்பொழுது பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக ஆடி 18ம் பெருக்கு அன்று விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. திருச்சியில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே உள்ளது காவேரி அம்மன் கோயில். இக்கோயிலின் சிறப்பு காவேரி அம்மன் முன் வீற்றிருக்கும் நந்தி. இந்த நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறது. எப்பொழுதெல்லாம் நீர்வளம் குறை கிறதோ அப்போதெல்லாம் இந்த அன்னையை வேண்டி சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடத்தப்படுகின்றன.

நதிகள் ஜீவாத்மா,கடல் பரமாத்மா

நதிகள் ஜீவாத்மா. அவைகள் வெவ்வேறு இடங்களில் தோன்றுகின்றன. நதிகள் எப்படி தன்னுடைய பயணத்தில் பலருக்கும் பயன்படுகிறதோ, அதைப்போல, நம்முடைய வாழ்வும் பலருக்கும் பயன்பட வேண்டும். நதிகளின் நோக்கம் கடலைச் சென்று அடைவது தான். அதைப்போல ஜீவாத்மாக்களின் நோக்கம் இறைவனைச் சென்று அடைவது தான். அந்த இறைவன்தான் கடல். கடலுக்கு எப்படி கரைகள் இல்லையோ. அதேபோல், இறைவன் எல்லையற்றவனாக, ஆதி அந்தம் இல்லாதவனாக, இருந்திருக்கின்றான். இதை ஒரு அருமையான பாடலில் பாடுகின்றார் வள்ளல்பெருமான்.

சமயத் தத்துவங்களும் ஆறுகளும்

பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் கோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவதேவே – (திருவருட்பா 2118)

இன்னொரு விஷயமும் இந்தப் பாடலில் மிக விளக்கமாகக் கொடுக்கின்றார் வள்ளல் பெருமான். நம்முடைய பாரத நாட்டில் பல்வேறு நதிகள் இருப்பது போலவே, பல்வேறு சமய நெறிகளும் இருக்கின்றன. பல்வேறு சமயங்கள் என்பன ஆறுகள் போல. ஆனால் எல்லாச் சமயங்களின் நோக்கமும் கடலாகிய பரம்பொருளை அடைவது தான். அந்தப் பரம்பொருள் பரந்து, விரிந்து இருக்கின்றான். நதிகளுக்கு நீர் ஆதாரம் கடல் தான். கடலில் உள்ள நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகி, நதியாகிறது. அதைப்போல் சமயங் கள் எல்லாம் பரம் பொருளாகிய கடவுள் என்கின்ற கடலிலிருந்து தான் தோன்றி நிறைவாக கடவுளையே அடைகின்றன. எந்தச் சமயத்தைச் சார்ந்த வராக இருந்தாலும் நதிகளில் நீராடும் பொழுது இந்தப் பாடலையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நதிகளுக்கு அப்படி என்ன சிறப்பு?

இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஒன்பது ஆறுகளை மிகப் புனிதமாகக் கருதுவர். இவற்றில் நீராடினால் பாவங்கள் நீங்கி, நற்கதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் நீராடும் போது உச்சரித்தாலே, நீராடிய பலன் அடைவார்கள். நதிகளுக்கு பெருமை ஏற்பட்டதற்கு காரணம் அதன் கரைகளில் பகவான் எழுந்தருளியிருக்கிறார். பெரும்பாலும் ஒவ்வொரு ஆற்றின் கரையிலும் ஒரு புண்ணியத்தலம் இருக்கும். பல ஞானிகள் இந்த நதிக் கரைகளில் மிகப்பெரிய யாகங்களை நடத்தியிருக்கிறார்கள். அக்காலத்தில் நதிக்கரைகளில் பரண் அமைத்து முனிவர்களாலும் ரிஷிகளாலும் கல்வி கற்பிக்கப்பட்டன. இந்திய புராணங்களில் பெரும்பாலான புராணங்கள் கங்கை நதிக் கரையில் சொல்லப்பட்ட புராணங்கள் தான். பல உபநிடதங்கள் கங்கை நதிக்கரையில் தான் தோன்றின.

நதிகளின் பெயர்களை சொல்லி சங்கல்பம்

நமது சாஸ்திரங்களில் புண்ணிய நதி களில் நீராடி, அதன் கரைகளில் செய்யும் வழிபாடுகளும், தானங்களும், யாகங்களும், பல மடங்கு நன்மை தரும் என்று சொல்லி இருக்கின்றார்கள். இந்தியாவில் புண்ணிய நதிகளை நவநிதிகள் என்று சொன்னார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று பார்க்க வேண்டும். நவம் என்பதற்கு ஒன்பது என்பதுடன் புதியது என்பதும் பொருளாகும். வற்றாது நீர் ஓடிக் கொண்டே இருக்கும் நதிகள் எதுவாக இருந்தாலும் நவநதிகள் என்று அழைக்கப்பட்டன. காரணம் ஆற்றில் நீர் தேங்காது. கணந்தோறும் புதிய நீர் வந்து கொண்டே இருக்கும். எனவே தண்ணீர் எப்போதும் புதியது (நவம்) ஆகும். இதையொட்டி ஓடிக்கொண்டே இருக்கும் ஆற்றை நவ நதி என்றே அழைக் கிறோம். நம் பூசைகளின் ஆரம்பத்தில் செய்யப்படும் சங்கல்பத்தில், இந்த நதிகளின் பெயர்கள் கூறுகிறோம். நாம் மேற்கொள்ளும் பூசையை நதிகளின் கரையில் செய்வதால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலனைத் தருமாறு நதி தேவதைகளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஏன் புனித நதிகளில் நீராட வேண்டும்?

வழிபாட்டுக்கு இரண்டு தூய்மைகள் அவசியம். ஒன்று புறத் தூய்மை. அது தினசரி நீராடுவதால் கிடைக்கும். அதைத்தான் காலைக்கடன் என்று சொன்னார்கள். இன்னொன்று அகத்தூய்மை. அது நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும் எண்ணங்களாலும் ஏற்படும். வழிபாட்டுக்கு இந்த அகத்தூய்மை, புறத்தூய்மை இரண்டும் அவசியம் என்பதால் நீராடிவிட்டு, கோயிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். நதி நீராடல் மிகவும் உத்தமமானது. அதுவும், புஷ்கரம், மாசிமகம் முதலிய சமயத்தில் நதி நீராடல் மிக மிக உத்தமமானச் செயல். புஷ்கரம் என்பது நதிகளின் திருவிழா. ஓடுகின்ற ஆற்று நீரில் குளிப்பது உத்தமம் என்றும், நிலைத்து உள்ள ஏரி, குளம், கிணற்றில் குளிப்பது மத்திமம் என்றும், ஸ்நான (நீராடல்) விதி கூறுகிறது.

நீரில் இரண்டு சக்திகள்

நீரில் இரண்டு சக்திகள் இருப்பதாக வேதம் போற்றுகிறது. ஒன்று, அது தாகம் தீர்க்கும். பயிர்களை வளரச் செய்யும். இரண்டாவது, சுத்தம் செய்வது. மறைமுகமாக மேத்யம், யஜனம் என்ற இரண்டு சக்திகளும் உள்ளன. ‘மேத்யம்’ என்பது நதியில் இறங்கி மூன்று முறை மூழ்கி எழுந்தால், பாவங்கள் தீரும். ‘யஜனம்’ என்றால் நீரைத் தெளிப்பதால் பூஜா திரவியங்கள் பரிசுத்தமாகும். நீர் நாராயண சொரூபம். ஆதலால், அவருடைய ஸ்பரிசத்தினால் பாவங்கள் தொலைந்து சுத்தமாகின்றன. நாராயணன் என்றாலே தீர்த்தன் என்றுதான் பொருள்.

Tags : Adib ,Peru ,Talib Peruka ,Audi Eighteenth Peruk ,God ,
× RELATED ஆடிப்பெருக்கு!