டெல்லி: போராட்டக்காரர்கள் மீதான அனைத்து FIR-களையும் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) எச்சரித்துள்ள நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் ஒன்றிய அரசு பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
CJP அமைப்பின் புதிய போராட்ட மிரட்டலைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, போராட்டக்காரர்கள் ஊடுருவுவதைத் தடுக்க இரும்பு தடுப்புகள் (பேரி கார்டுகள்) ஒன்றாகச் சேர்த்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் போராட்டங்களின் போது போராடுபவர்கள் இரும்பு தடுப்புகளை அகற்றுவதைத் தடுக்கும் வகையில், ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் உள்ள தடுப்புகள் வெல்டிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், டெல்லி காவல்துறை பெருமளவிலான காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினரை ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியை மீறியதாக CJP குற்றம் சாட்டி வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட CJP-யின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, அரசு தங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முற்றிலும் மீறிவிட்டதாக குற்றம் சாட்டினார். இதனால் மீண்டும் போராட்டக் களத்திற்குத் திரும்புவோம் என்றும் அந்த கட்சி மிரட்டல் விடுத்துள்ள நிலையில், ஜந்தர் மந்தரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
