×

கிரிமினல் வழக்குகளில் சிக்காமல் இருக்க பெயர் மாற்றம் செய்வது அவசியம்: போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை

 

வேலூர், ஜூலை 30: கிரிமினல் வழக்குகளில் சிக்காமல் இருக்க பழைய வாகனங்கள் விற்பனை செய்யும்போது பெயர் மாற்றம் மிக அவசியம் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2025ம் ஆண்டு நிலவரப்படி 3கோடியே 15 லட்சத்து 81ஆயிரத்து 62 இருசக்கர வாகனங்கள் இயங்கி வருகிறது. 3 லட்சத்து 46ஆயிரத்து 954 ஆட்ேடாக்கள் இயங்கி வருகிறது. 3லட்சத்து 33 ஆயிரத்து 325 லாரிகள் இயங்கி வருகிறது. 3 கோடியே 76லட்சத்து 9ஆயிரத்து 165 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. கோடிக்கணக்கான வாகனங்கள் இயங்கி வந்தாலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலமாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் பழைய வாகனங்கள் விற்பனையும் அதிகளவில் நடந்து வருகிறது. பழைய வாகனங்கள் விற்பனையகங்கள் கடந்த 5 ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது.

புதிய வாகனங்கள் வாங்க விரும்புவோர், தங்களிடம் உள்ள பழைய வாகனங்களை விற்பனை செய்துவிடுகின்றனர். விற்பனை செய்யும்போது, வாகனங்களை யாருக்கு விற்பனை செய்கிறோமோ, அவர்களுக்கு பெயர் மாற்றம் செய்து கொடுப்பது மிக அவசியமாக உள்ளது. பெயர் மாற்றம் செய்யாவிட்டால் கிரிமினல் வழக்குகளில் சிக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும்போது பெயர் மாற்றம் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும். இதுகுறித்து வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் கூறுகையில், ‘பொதுமக்கள் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும்போது, கட்டாயம் பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும். வாகனத்திற்கான பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, உங்களது வாகனத்தையும், ஆர்டிசி புக் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துவிட்டால் போதாது.

பெயர் மாற்றப்படாவிட்டால், வாகனங்களை வாங்கி செல்லும் நபர், அந்த வாகனத்தை குற்றசம்பவங்களுக்கு, கடத்தலுக்கு பயன்படுத்தினால், அதற்கு வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவரே பதில் சொல்ல வேண்டும். ஒரு வேளை பெயர் மாற்றப்படாத வாகனங்கள், விபத்தில் சிக்கி, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை அபராதம் விதித்தால், அதனை வாகனத்தின் உரிமையாளர் தான் செலுத்த வேண்டும். எனவே வாகனம் விற்பனை செய்யும்போது பெயர் மாற்றம் மிக அவசியம், என்றார்.

Tags : Vellore ,Tamil Nadu ,
× RELATED முதல்வரின் கடிதத்தை காட்டி ரூ.1000 வசூல்;...