இடைப்பாடி, ஜூலை 30: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி பஸ் நிலையத்தில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி மற்றும் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், ‘தேர்தல் வாக்குறுதி படி எந்த நிபந்தனையும் இன்றி கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்த வேண்டும். இந்த இரண்டு முக்கிய வாக்குறுதிகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,’ என்றார்.
தமிழ்நாடு கள் விடுதலை இயக்கம் நல்லசாமி கூறுகையில், ‘விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவில்லை என்றால், முதலமைச்சர் பதவி விலக வேண்டும். கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்,’ என்றார். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் டிராக்டரில் விவசாய காய்கறிகளை கட்டிக்கொண்டு, பூலாம்பட்டி பஸ் நிலையத்திலிருந்து பூலாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். அங்கு கூட்டுறவு சங்க அதிகாரியிடம் கோரி மனு அளித்தனர்.
