×

பழநி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் 4 பேர் கைது: ஒருவருக்கு சிபிசிஐடி போலீஸ் வலை

திண்டுக்கல்: பழநி கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தை, தனியார் டிரஸ்ட் சார்பில் விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர், கடந்த ஜூலை 6ம் தேதி திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழநி அருகே டி.கே.என் புதூரை சேர்ந்த சேதுபதி ஆகியோருக்கு ரூ.2 கோடிக்கு விற்பனை செய்தார்.

ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம், ரூ.2 கோடிக்கு கிரயம் செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கண்காணிப்பாளர் (நிலங்கள் பிரிவு) முருகானந்தம் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார். இதன்பேரில், பழநி அடிவாரம் போலீசார் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், இடத்தை விற்ற முருகதாஸ், கிரயம் வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 15ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, எஸ்பி ஷாஜிதா மேற்பார்வையில், டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் செயல் அலுவலர் கணபதி, கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். ஜூலை 27, 28, 29 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடமும் விசாரணை நடந்தது.

நிலத்தின் உரிமையாளரான குப்புசாமி மணியக்காரரின் வாரிசுதாரர்களான சுந்தரி, இவரது மகன் விஷ்ணு சுதர்சன், மகள் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்றுமுன்தினம் மாலை திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். 1880ம் ஆண்டு முதல் நிலத்திற்கான மூல ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் (56), நிலத்தை வாங்கிய ​திருப்பூரை சேர்ந்த வெள்ளத்துரை (60), பழநி புதூரையை சேர்ந்த சேதுபதி மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பழநி கவுண்டன்குளம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65) ஆகிய 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று காலையில் கைது செய்தனர். இவர்கள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நில புரோக்கரும், பத்திர எழுத்தருமான ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 4பேரையும் ஆக. 12ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

* சார்பதிவாளர்கள், உயரதிகாரிகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? விவிஐபிக்களை காப்பாற்ற திட்டமா?

ஜூலை 6ம் தேதி பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அந்த சம்பவத்தில் 23 நாட்களுக்கு பிறகு நேற்று கைது நடவடிக்கை நடந்துள்ளது. இந்த வழக்கில் நிலத்தை விற்ற முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், நிலத்தை பதிவு செய்த சார்-பதிவாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலத்தை பத்திரப்பதிவு பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் துறைரீதியிலான நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் பெற்றார். இந்த மனு மீதான விசாரணையின் போது, ‘‘இந்த நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை மட்டுமே தொடர்பு இருப்பது என்று சொல்ல முடியாது. இரு சார்-பதிவாளர்களும் (விடுமுறையில் சென்றவர்) சேர்ந்துதான் பத்திரப்பதிவு செய்து உள்ளனர். இதனால் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்று ஐகோர்ட் கிளை தெரிவித்திருந்தது.

ஆனால், சார்-பதிவாளர்கள் மீது போலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்டால், மேல் மட்டத்தில் உள்ள விவிஐபிக்கள் சிக்குவார்கள் என்பதால், நிலத்தை வாங்கியவர்கள், விற்றவர்களை மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்களா? ஜஸ்டின் மணிகண்டன் மீது ஏற்கனவே 2 போலி பத்திரப்பதிவு செய்து உள்ளதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இருந்தும் அவர் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tags : Palani Temple ,CBCID ,Dindigul ,CBCID police ,Dandayudapani Swami Monastery ,Palanii, Dindigul district ,
× RELATED அரசு பஸ்சில் தொழிலாளிக்கு சரமாரி வெட்டு; பயணிகள் ஓட்டம்