ஆயுதமேந்திய குழுவை குறிவைத்து அமெரிக்கா-சவுதி ராணுவங்கள் இணைந்து ஈராக் மீது தாக்குதல்: ஜோர்டான் மீது ஈரான் பதில் தாக்குதல்

கெய்ரோ: அமெரிக்கா, சவுதி அரேபியா ராணுவங்கள் இணைந்து ஈராக்கின் ஆயுதமேந்திய குழு மீது நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக ஜோர்டான் மீது ஈரான் ஏவுகணை ஏவியது. அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் ஓய்ந்துள்ள நிலையில், இந்த சண்டை வேறு விதமாக விரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், ஈரானுக்கு ஆதரவாக ஈராக் நாட்டில் செயல்படும் பாப்புலர் மொபைலிசேஷன் போர்சஸ் (பிஎம்எப்) எனப்படும் ஆயுதமேந்திய அமைப்பு சவுதியின் கிழக்கு மாகாணத்திலும், ரியாத்திலும் எண்ணெய் கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று காலை சவுதி அரேபிய ராணுவமும், அமெரிக்காவும் இணைந்து ஈராக் நாட்டில் ஆயுதமேந்திய அமைப்பை குறிவைத்து 7க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், பிஎம்எப் அமைப்பை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். 32 பேர் காயமடைந்தனர். அந்த அமைப்பின் பல்வேறு ராணுவ கட்டமைப்புகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை ஏவியது.

ஈரானின் 5 ஏவுகணைகள் வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈராக் அமைப்பு மீதான தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை ஈராக்கின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பு என்று கூறி உள்ளது.

மேலும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்றும், போரின் எல்லையை விரிவுபடுத்தும் அமெரிக்கா, இஸ்ரேலின் நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும் ஈரான் குற்றம்சாட்டி உள்ளது. இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தியில் உத்தரவை மீறி அங்கீகரிக்கப்படாத பகுதியில் பயணித்ததாக 3 எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறி உள்ளது.

* யார் இந்த பிஎம்எப்?
கடந்த 2014ல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை எதிர்த்து போரிட பிஎம்எப் ஆயுதப் படை உருவாக்கப்பட்டது. 2016ல் இந்த அமைப்புக்கு ஈரான் அரசு அங்கீகாரம் அளித்தது. நாட்டின் ராணுவத்தின் ஒருபகுதியாக பிஎம்எப் சேர்க்கப்பட்டது. பிஎம்எப் அமைப்புக்கு ஈரானும் முழு ஆதரவு அளித்தது. நிதி உதவி, ஆயுத பயிற்சிகளை வழங்கியது. ஈரானின் துணை ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையின் வழிகாட்டுதலில் பிஎம்எப் இயங்குகிறது.

Related Stories: