குறு, சிறு நிறுவனங்களில் டிஜிட்டல் சேவையை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசுடன் கைகோர்க்கும் சென்னை ஐஐடி

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘வால்மார்ட் குளோபல் டெக்’ நிறுவன சமூக பொறுப்புணர்வு நிதி உதவியுடன், சென்னை ஐஐடியின் ‘தொழில்நுட்ப உயர்சிறப்பு மையம்’ இக்கூட்டு முயற்சியை முன்னெடுக்கும். உற்பத்தி, சில்லறை விற்பனை, அதனை சார்ந்த துறைகளில் இயங்கும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் வலுவூட்டலுக்காக இந்த மையம் செயல்படுகிறது.

பெருமளவிலான மூலதன முதலீடுகளின்றி, எளிதில் அணுகக்கூடிய மற்றும் வளர்க்கக்கூடிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில், இந்த கூட்டாண்மையின் மூலம் உருவாக்கப்படும் தீர்வுகள் குறைந்த செலவிலும் பயனர்-நட்புடனும் இருக்கும். இக்கூட்டு முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ‘FaMe TN’ மற்றும் ஐஐடி மெட்ராஸ் இடையே கையெழுத்தானது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் முதிர்ச்சியை மதிப்பிடுவதற்காக ‘மாநில அளவிலான குறு சிறு மற்றும் நடுத்தர டிஜிட்டல் தயார்நிலை மற்றும் தழுவல் குறியீட்டை’ உருவாக்குவது இக்கூட்டாண்மையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி கூறுகையில், ‘இக்கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தொழில்துறைச் சூழலுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறைந்த செலவிலான உள்நாட்டு டிஜிட்டல் தீர்வுகளை குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பின்பற்றுவதற்கு வசதியாக ஐஐடி மெட்ராஸ் மற்றும் ‘FaMe TN’ இணைந்து செயல்படும்.

தொடர்ச்சியான பயிற்சிகள், நேரடி டிஜிட்டல் செய்முறைக்கூடங்கள். உயர்மட்டப் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் தொழில்முனைவோர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்களிடையே நீண்டகால டிஜிட்டல் திறன்களை உருவாக்குவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,’ என்றார்.

Related Stories: