காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஆர்என்ஆர் ரக நெல் மூட்டை ரூ.2,550க்கு விற்பனை

காவேரிப்பாக்கம் : ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தற்போது நடப்பு சொர்ணவாரி பட்டத்தில் சுமார் 20,177 எக்டர் பரப்பளவில் ஏரி பாசனம், கிணறு பாசனம் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் பாசன வசதி செய்யப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நெற்பயிர்கள் சில இடங்களில் இளம் பயிர் முதல் கதிர் பயிர் வரை வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் விவசாயிகள் நெற்பயிரில் பூச்சிகள் தாக்குதல் கட்டுப்படுத்த ரசாயன உரங்கள் பயன்படுத்தி, பூச்சிகள் தாக்குதல் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயத்தில் இயந்திர நடவு, இயந்திர அறுவடை, இயந்திர மருந்து தெளிப்பு, என கூடுதல் செலவுகள் ஏற்பட்டுள்ளது.

தற்போது சொர்ணவாரி பருவத்தில் ரசாயன மருந்துகள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் நெல் விலைகள் மட்டும் இன்னும் உயராமல் பழையபடியே காணப்படுகின்றன. இதனால் இரண்டு நெல் மூட்டை விற்பனை செய்தால் மட்டுமே ஒரு மூட்டை ரசாயன உரம் வாங்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக விவசாயத்தில் போதிய வருமானம் இன்றி விவசாயிகள் கடன் சுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதன்காரணமாக இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஆர்வம் இன்றி வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் நல்ல மழைப்பொழிவு இருந்து வந்தது. இதன் காரணமாக விவசாயிகள் மூன்று பருவங்களிலும் பயிர் செய்து அறுவடை செய்து வந்தனர்.

அப்போது வறட்சியினால் நெற்பயிர் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் நடப்பு 26-27ம் நிதியாண்டில் சொர்ணவாரி பட்டத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு போதிய மலைப்பொழிவு இல்லாத காரணத்தினால் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் ஆங்காங்கே காய்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் நெற்பயிர் காப்பாற்ற கடன் வாங்கி போடப்பட்ட போர்வெல்களில் தண்ணீர் போதிய அளவு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

மேலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவ நிலை மாற்றம் காரணமாக பருவமழை போதிய அளவு பெய்யாமல் உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு கீழே சென்றுவிட்டது. இதனால் பயிர்களின் முக்கியமான பருவமான கிளைக்கும் பருவம், தொண்டை பருவம், கதிர் வெளிவரும் பருவம் ஆகிய நிலையில் தண்ணீர் இல்லாததால், நெற்பயிரில் பச்சையம் குறைந்து காய்ந்து இலைகள் மஞ்சள் வெளியிட நிலையில் முற்றிலும் காய்ந்து விட்டது.

இந்நிலையில் இந்த இயற்கை இடர்பாடுகளையும் தாண்டி தற்போது தாங்கள் பயிரிட்ட நெல் வயல்களை விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ஆர்என்ஆர் ரக நெல் 75 கிலோ எடை கொண்ட மூட்டை அதிகபட்சமாக ரூ.2550க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ.2300க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

கோ-51 ரக நெல் அதிகபட்சமாக ரூ.2100க்கும், குறைந்தபட்சமாக ரூ.1940க்கும், 10க்கு பத்து ரக நெல் ரூ.1639க்கும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: