சிங்கப்பெண் அதிரடி படை உதவி ஆய்வாளர் சர்ச்சை பேச்சு ; சிறப்பு பிரிவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்சிங்கப்பெண் அதிரடி படை உதவி ஆய்வாளர் சர்ச்சை பேச்சு ; சிறப்பு பிரிவிலிருந்து மாற்றப்பட்டதாக தகவல்

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் நோக்கில், தமிழக காவல்துறையில் “சிங்கப்பெண் அதிரடி படை” என்ற சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் 20-ஆம் தேதி, அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் சிங்கப்பெண் அதிரடி படையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய பெண் உதவி ஆய்வாளர் சுமதி, “18 வயதிற்குக் குறைவான பெண்களிடம் நீங்கள் பேசினால், போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு செல்ல நேரிடும்” என மாணவர்களை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அச்சுறுத்தும் வகையில் பேசியதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, சிங்கப்பெண் அதிரடி படையில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சுமதி அந்தப் பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர் ஏற்கனவே பணியாற்றி வந்த அரியலூர் காவல் நிலையத்திற்கே மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான உத்தரவை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: