சென்னை: சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு தோல் பொருட்கள், காலணிகளின் மேல் பாகங்கள், ஜவுளி ரகங்கள், ஆயத்த ஆடைகள், ரசாயனம், இயந்திர உதிரி பாகங்கள், தங்க ஆபரணங்கள், புதிதாக தயாரிக்கப்படும் நவீன கார்களின் மாடல்கள், காய்கறிகள், பழங்கள், பூ வகைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து சுத்தமான தங்க கட்டிகள், இயந்திர சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள், கெமிக்கல்கள், பதப்படுத்தப்பட்ட தோல் பொருட்கள், பிரிண்டிங் மைகள், உயர் ரக பேப்பர்கள், கார்கள் போன்றவை அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. சரக்கு போக்குவரத்தை கால தாமதம் இல்லாமல், துரிதமாக எக்ஸ்பிரஸ்வேயில் நடத்துவதற்காக இடிஐ எனப்படும் எலக்ட்ரானிக் டேட்டா இன்டர் சேஞ்ச் என்ற முறை கையாளப்படுகிறது.
அந்த முறையில் சரக்குகள் சிங்கப்பூர், ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து விமானங்களில் ஏற்றப்பட்டு, அங்கு சுங்கச் சோதனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்து, சீல் வைத்து விடுவார்கள். அதன் பின்பு அந்த சரக்கு விமானம் குறிப்பிட்ட அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இடையில் வேறு எந்த நாட்டிற்கும் செல்லாமல் நேரடியாக சென்னையில் வந்து இறங்கிவிடும். சென்னை விமான நிலையத்தில் இந்த முறையில் எக்ஸ்பிரஸ்வே சரக்குகளை டெலிவரி கொடுப்பதற்கு தாமதம் இல்லாமல் மேற்கொள்வதற்கு நவீன நடைமுறை கையாளப்படுகிறது. அதன்படி, எக்ஸ்போர்ட் கிரவுண்ட் மனிஃபர்ஸ்ட் எனப்படும் இஜிஎம் எண் வணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.
அதன்படி, தாமதம் இல்லாமல் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கின்றனர். இதனால் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள், சென்னை விமான நிலைய கார்கோ சேவையை அதிகமாக பயன்படுத்துவதால் ஆண்டுக்காண்டு சென்னை விமான நிலையத்தில் கார்கோ சேவைகள் அதிகரித்து வருகின்றன. அந்த அடிப்படையில் சென்னை விமான நிலையத்தின் கார்கோவில், கடந்த 2024-25ம் ஆண்டைவிட, 2025-26ம் ஆண்டில், 11.7 சதவீதம் அதிகமாகி உள்ளது. அதோடு தேசிய அளவில், சராசரி வளர்ச்சி 6.2 சதவீதம் அதிகமாகியுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில், சென்னை விமான நிலைய கார்கோவில், ஒரே மாதத்தில் 16 ஆயிரம் டன் சரக்குகளை இறக்குமதி செய்து, சாதனை படைத்துள்ளது. சென்னை விமான நிலைய கார்கோ வரலாற்றில், ஒரே மாதத்தில், அதிக எடை உடைய சரக்குகளை இறக்குமதி செய்து கையாண்டது, இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலைய கார்கோ, இந்தியாவின் மிக முக்கியமான கார்கோ பிரிவாக உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னை விமான நிலைய சரக்குகளை கையாளுவதற்கு கூடுதலாக இட வசதிகள் தேவைப்படுகின்றன. சென்னை விமான நிலையத்தில் 5வது சேட்டிலைட் முனையத்தை அமைக்க, இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. அந்த சேட்டிலைட் 5வது முனையம், சரக்குப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி, பயணிகள் போக்குவரத்தும் சேர்ந்து, அந்த புதிய சேட்டிலைட் முன்னையத்தில் சேவைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இந்த 5வது சேட்டிலைட் புதிய முனையம், அதிக நவீன வசதிகள் கொண்டதாக இருக்கும் என்றும், சரக்குகள் ஏற்றி இறக்குவது துரிதமாக நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு பயணிகள் பயன்படுத்தும் டிராலிகள், ரோபோ டைப் டிராலிகளாக இருக்கும் என்றும், பயணிகளுக்கும் சரக்குகள் கையாளுவதற்கும் மேலும் பல அதிநவீன வசதிகளை செயல்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சேட்டிலைட் 5வது புதிய முனையம், தற்போதைய நான்காவது முனையத்திற்கு தெற்கு பகுதியில் பல்லாவரம் திசையில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய கட்டுமான இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த சேட்டிலைட் ஐந்தாம் முனையம் கட்டுமான பணிகள் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சேட்டிலைட் ஐந்தாவது புதிய முனையம் செயல்பாட்டிற்கு வந்தால் சென்னை விமான நிலையத்தில் கார்கோ ஏற்றுமதி இறக்குமதி, மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
