புழல்: செங்குன்றத்தில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை கொண்டாடும் வகையில், தவெக சார்பில் 10 நடைபாதை வியாபாரிகளுக்கு, தள்ளுவண்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில், மாதவரம் எம்எல்ஏ எம்.எல்.விஜய்பிரபு பங்கேற்று, 10 நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். முன்னதாக, விழாவிற்கு வந்த மாதவரம் தவெக எம்எல்ஏ விஜய்பிரபுவின் காரை, முக்கியமான சாலையான ஜிஎன்டி சாலை நடுவில் நிறுத்தி அக்கட்சியினர், அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.
இதனால், சென்னை மாநகர பேருந்துகள் உள்பட பெரும்பாலான வாகனங்கள் செல்ல வழியின்றி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படதால் விழாவிற்கு வந்த கட்சியினர், தங்களது பைக் மற்றும் கார்களை திரையரங்கம் வளாகத்தில் நிறுத்தியதால் கட்சி நிர்வாகிகளுக்கும், திரையரங்கத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தவெகவினரால் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்களை பாதிக்கும் வகையில், வாகனங்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விழாக்களை நடத்தும் ஆளும் கட்சியினர் பொதுமக்களை பாதிக்காத வகையில், நடத்திட முதல்வர் உரிய அறிவுறுத்தல்களை வழங்கிட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
