வேலூர், ஜூலை 29: காட்பாடியில் ஓடும் ரயிலில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. கேரளா மாநிலம் திருச்சூரில் இருந்து ஒடிசா நோக்கி செல்லும் டாடா நகர் எக்ஸ்பிரஸ் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் நிறைமாத கர்ப்பிணியான ஜமுனாமஜி தனது கணவர் ஜிது சக்காரியாவுடன் பயணம் செய்தார். இந்நிலையில் குடியாத்தம்-காட்பாடி ரயில் நிலையத்துக்கு இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது ஜமுனாமஜிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது ஜமுனா மஜிக்கு ரயிலிலேயே சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. சில நிமிடங்களில் ரயில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து நின்றது. உடனே ரயில்வே போலீசார் தாய் மற்றும் சேயை பாதுகாப்பாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
