×

மாணவர்கள் போராட்டத்தில் பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகள் 2 ரவுண்ட் பயன்படுத்தப்பட்டது: டெல்லி காவல்துறை தகவல்

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக, பெல்லட் குண்டுகள் பயன்படுத்தியதில் பல மாணவர்கள் படுகாயமடைந்தது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தர எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி நடந்த சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தின் பொது டைரியில் பதிவு செய்யப்பட்ட விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தினசரி முக்கிய நிகழ்வுகள் பொது டைரியில் போலீசார் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், ஜூலை 20ம் தேதி மாணவர்கள் போராட்டத்தின் போது, ஜந்தர் மந்தர் அருகே மண்டலம்-1 பகுதியில் டெல்லி காவல்துறையின் துணை ஆணையர் தரத்திலான அதிகாரியுடன் இணைந்து நீல நிற சீருடை அணிந்த விரைவு அதிரடிப்படையினர் 2 ரவுண்ட் பிளாஸ்டிக் பெல்லட் குண்டுகளால் சுட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக பிளாஸ்டிக் குண்டுகள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, 55 நான்-எலக்ட்ரிகல் குண்டுகள், 15 எலக்ட்ரிக் குண்டுகள், 5 கண்ணீர் புகை குண்டுகள், கலவரத் தடுப்பு துப்பாக்கியிலிருந்து 2 ரவுண்ட் என போராட்டக்காரர்களை விரட்ட பயன்படுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Delhi Police ,New Delhi ,NEET ,
× RELATED அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவாய்...