×

கனமழையால் ரிஷிகேஷில் அபாய அளவை நெருங்கும் கங்கை நதி.!! பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

கர்வால்: உத்தராகண்டின் கர்வால் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை தற்போது ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிவேணி காட் பகுதியில் கங்கை நதி மிகுந்த வேகத்துடன் பாய்ந்து கொண்டிருக்கிறது.

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படும் நிலையில் நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவை விட சுமார் 50 சென்டிமீட்டர் மட்டுமே குறைவாக உள்ளது. நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பேரிடர் நிவாரணக் குழுவினர் இணைந்து, ரிஷிகேஷ், முனி கி ரேட்டி மற்றும் லக்ஷ்மன் ஜூலா ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய படித்துறைகளில் இருந்த பக்தர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக ஆற்றங்கரையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டு கொண்டனர்.

தொடர் மழை காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் நீரோட்டம் மிகவும் வேகமாகவும் ஆபத்தானதாகவும் காணப்படுவதாகவும் அதிகாரிகள் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற அமைப்புகள் ஆற்றுப் படித்துறைகளில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றவும், ஆற்றின் அருகே செல்வதைத் தவிர்க்கவும், அவசரநிலை ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாகக் கட்டுப்பாட்டு அறை அல்லது பேரிடர் மீட்புக் குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Ganga river ,Rishikesh ,Garhwal ,Uttarakhand ,Triveni Ghat ,
× RELATED வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த...