×

‘வான்டார்’ நிறுவனம் வெளியிட்ட பகீர் தகவல்; லடாக், அருணாச்சல் எல்லையில் 11 போர் விமானங்களை நிறுத்தியது சீனா: செயற்கைக்கோள் படத்தில் ஆதாரங்கள் வெளியானதால் பரபரப்பு

புதுடெல்லி: இந்திய எல்லைக்கு எதிரே ரடாரில் சிக்காத 11 அதிநவீன ‘ஜே-20’ ரக போர் விமானங்களை சீனா புதிதாக நிலைநிறுத்தியுள்ள தகவல் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா தனது ராணுவப் பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு திபெத்தின் தாவோசெங் யேடிங் விமான நிலையத்திலும், கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் சிக்கிம் எல்லைக்கு அருகே உள்ள சிகட்சே விமான தளத்திலும் சீனாவின் ‘ஜே-20’ ரக ஸ்டெல்த் போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு வெறும் 50 ஆக இருந்த ஜே-20 விமானங்களின் எண்ணிக்கையை, தற்போது 300 முதல் 500 வரை சீனா உயர்த்தியுள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் 1,000 ஸ்டெல்த் விமானங்களை தயாரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்திய விமானப்படையிடம் ரடாரில் சிக்காத ஸ்டெல்த் ரக விமானங்கள் எதுவும் இல்லாத நிலையில், பிரான்சிடம் இருந்து பெறப்பட்ட 36 ‘ரஃபேல்’ விமானங்கள் மற்றும் ரஷ்யா தயாரிப்பான சுகோய்-30 எம்கேஐ விமானங்களையே இந்தியா நம்பியுள்ளது. இந்தியாவின் சொந்த தயாரிப்பான ‘ஏஎம்சிஏ’ ஸ்டெல்த் போர் விமானம் அணிவகுப்பில் இணைய இன்னும் 10 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘வான்டார்’ நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஹோடன் மற்றும் தம்ஷங் ஆகிய இரு சீன விமான தளங்களில் 11 ‘ஜே-20’ ஸ்டெல்த் போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

லடாக் எல்லையில் உள்ள தவுலத் பெக் ஓல்டி விமான தளத்தில் இருந்து வெறும் 245 கி.மீ தொலைவில் உள்ள ஹோடன் தளத்தில் 7 விமானங்களும், அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் இருந்து 344 கி.மீ தொலைவில் உள்ள தம்ஷங் தளத்தில் 4 விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து முன்னாள் போர் விமானி சமீர் ஜோஷி கூறும்போது, ‘இந்திய எல்லையை எதிர்கொள்ளும் உயரமான தளங்களில் இருந்து ஐந்தாம் தலைமுறை விமானங்களை இயக்குவது சீனாவிற்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இது இந்திய விமானப்படைக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.

மேலும் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி கூறும்போது, ‘ஆண்டிற்கு 125 போர் விமானங்களை உற்பத்தி செய்யும் அதிநவீன உற்பத்தித் திறனை சீனா பெற்றுள்ளது. திட்டமிட்ட இலக்கை எட்ட அவர்கள் தேசிய அளவில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்’ என்று கூறியுள்ளார். ‘வான்டார்’ நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் குறித்து இந்திய விமானப் படை விசாரித்து வருகிறது.

Tags : Bakeer ,Vantar ,Ladakh, Arunachal border ,China ,NEW DELHI ,Indian border ,
× RELATED நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு...