*போலீசார் காவல் பணியில் ஈடுபட கோரிக்கை
சின்னசேலம் : சின்னசேலம் பஸ்நிலையத்தில் மாலை நேரங்களில் தொடரும் மாணவர்கள் கோஷ்டி மோதலை தடுக்க போலீசார் காவல் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்பிக்கு மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட சின்னசேலம் நகர பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் இருபாலர் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் உள்ளது.
இந்த பள்ளிகளுக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பேருந்துகளில் வந்து படித்து செல்கின்றனர்.
மேலும் காலை நேரத்தில் வீட்டிலிருந்து வரும் மாணவர்கள் போதிய நேரம் இல்லாததால் பஸ்நிலையம் போன்ற இடங்களில் காத்திருக்காமல் நேராக பள்ளிக்கு செல்கின்றனர். அதைப்போல மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் மாணவர்கள் சிலர் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். சில மாணவர்கள் பேருந்து வந்தாலும் அடுத்த பேருந்தில் செல்லலாம் என்ற எண்ணத்தில் பஸ்நிலையத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து செல்கின்றனர்.
அவ்வாறு மாணவர்கள் பேருந்தில் வந்து செல்லும்போது பேருந்தில் இடம் பிடிப்பது சம்பந்தமாகவும், பள்ளிகளில் சில நடவடிக்கையாலும் மாணவர்களிடையே முன்விரோதம் ஏற்படுகிறது. அந்த முன்விரோதத்தை மனதில் வைத்து பஸ்நிலையத்தில் பேருந்துக்கு காத்திருக்கும்போது ஒருவரையொருவர் திட்டிக்கொள்வது, தாக்கிக் கொள்வது போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் இவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாணவர்களும், உள்ளூர் இளைஞர்களும் களமிறங்குகின்றனர். இதுபோன்ற மாணவர்கள் கோஷ்டி மோதல் சம்பவங்கள் பஸ்நிலையத்தில் நடைபெறும்போது சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு தகவல் சொன்னால் வந்து மாணவர்களை விரட்டி விட்டு செல்வார்கள். இந்த மாணவ சமுதாயம்தான் நாட்டின் வருங்கால தூண்கள்.
அவர்களை வீட்டில் நல்வழிப்படுத்துவது பெற்றோர்களும், பள்ளியில் நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களும், பள்ளி விட்டு வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பு தருவது காவல் துறையினரின் கடமையாகும்.
ஆனால் சின்னசேலத்தை பொருத்தவரையில் மாணவர்கள் பள்ளியை விட்டு வந்து பஸ்நிலையத்தில் காத்திருக்கும்போது போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது இல்லை. அவர்கள் மாலை நேரங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நின்று கொண்டு விதிமீறிய வாகன வழக்கு போடுவதிலேயே குறியாக உள்ளனர்.
இதனால்தான் மாணவர்களிடையே கோஷ்டி மோதல் ஏற்படுவதுடன், தவறான பழக்கங்களிலும் ஈடுபடுகின்றனர். மேலும் பஸ்நிலையத்தில் வணிக வளாக கடையின் மாடிக்கு செல்லும் படிக்கட்டு பகுதியிலும், பஸ்நிலையம் பின்புறம் உள்ள குடிநீர் டேங்க் அடியிலும் சில இளைஞர் சமுதாயத்தினர் போதைக்கு அடிமையாகின்றனர்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் காவல் நிலையம் முன்பே நடந்தும் காவல் ஆய்வாளரோ, உதவி ஆய்வாளர்களோ சமுதாய நோக்கோடு, நல்ல எண்ணத்தோடு அந்த இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த நினைப்பதில்லை.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாலை நேரங்களில் பள்ளி விட்டு வரும் மாணவர்கள் பாதுகாப்பாக பஸ் ஏறி வீட்டுக்கு செல்கிறார்களா என்று தினமும் காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுரை கூறியுள்ளார்.
ஆனால் போலீசார் அதை கண்டுகொள்வதில்லை. சின்னசேலம் பஸ்நிலையத்தில் மட்டும் மாலை நேரங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பஸ் ஏற காத்திருக்கின்றனர். அப்போது மாணவிகளை கேலி, கிண்டல் செய்தல், பாலியல் சீண்டல் போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
ஆகையால் பள்ளி விட்டு, வீட்டுக்கு செல்ல சின்னசேலம் பஸ்நிலையத்தில் பஸ் ஏற காத்திருக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி கட்டாயம் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் நடந்தால்தான் போலீஸ் அலர்ட் ஆகுமா?
தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பஸ் ஏற காத்திருக்கும் மாணவி பாதிப்பு, பஸ் ஏற காத்திருந்த மாணவி கடத்தல் என்ற சம்பவம் நடந்தால்தான் ஒட்டுமொத்த தமிழக போலீசாரும் அலர்ட் ஆவார்கள். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லாம் இன்ஸ்பெக்டர் தனது வேனில் வந்து பஸ்நிலையத்தில் நின்று கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் இப்போது இன்ஸ்பெக்டரை வெளியில் பார்ப்பதே அரிதாக உள்ளது. ஆகையால் மாவட்ட எஸ்.பி. சின்னசேலம் பகுதியில் மாணவர்கள் கூடும் இடங்களில் போலீசார் காவல் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
