கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே கட்டுமான கழிவுகளால் 75 சதவீதம் தூர்ந்துள்ள பக்கிங்காம் கால்வாய்: வடசென்னைக்கு வெள்ள அபாயம்

சென்னை: கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே பக்கிங்காம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வடகிழக்கு பருவ மழையின்போது, வடசென்னை மக்கள் வெள்ள பாதிப்பில் தவிக்கும் அபாயம் உள்ளது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள நீர்வழி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்வது வழக்கம். குறிப்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய மழைநீர் வடிகால்கள் அமைப்பது, ஏற்கனவே உள்ள வடிகால்களில் வண்டல் கழிவுகளை அகற்றுவது, நீர்நிலை மற்றும் உபரி நீர் கால்வாய்களை தூர்வாரி, சீரமைப்பது போன்ற பணிகள் நடைபெறும்.

குறிப்பாக கோட்டூர்புரம் அடையாறு ஆறு, ராயபுரம் மண்டலத்தில் வடக்கு பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி, மணலி ஏரி, திருவிக நகர் மண்டலத்தில் ராஜிவ்காந்தி நகர் அருகிலுள்ள ஏகாங்கிபுரம் கால்வாய், நொளம்பூர் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், ரெட்டி குப்பம் கால்வாய், பாடி கால்வாய், சின்னசேக்காடு ஜாகிர் உசேன் கால்வாய், கொடுங்கையூர் கேப்டன் காட்டன் கால்வாய் உள்ளிட்ட முக்கிய கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தால் முன்னெச்சரிக்கை பணிகள் சரிவர நடைபெறவில்லை. குறிப்பாக, வட சென்னை பகுதி எந்தவொரு முன்னெச்சரிக்கை பணிகளும் நடைபெறாததால், வரும் மழைக்காலத்தில் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே உள்ள மிக முக்கிய வடிகாலாக திகழும் பக்கிங்காம் கால்வாயில், டன் கணக்கில் கட்டுமான கழிவுகளும் மணலும் கொட்டப்பட்டு நீர் வழித்தடம் முற்றிலுமாக தூர்ந்துள்ளது.

வட சென்னையின் கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் போன்றவற்றின் உபரி நீரை உள்வாங்கி வெளியேற்றும் ஒரே முக்கிய தடம் இந்த பக்கிங்காம் கால்வாய் தான். ஆனால், தற்போது கொட்டப்பட்டுள்ள கழிவுகளால் இந்தக் கால்வாயின் அகலம் மற்றும் நீர் செல்லும் திறன் 75% வரை முற்றிலும் குறைந்து, ஒட்டுமொத்த வடிகால் அமைப்பும் தூர்ந்துள்ளது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திலும் இதே இடத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டனர். மக்களின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு அது அகற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே தவறை மாநகராட்சி நிர்வாகம் அரங்கேற்றியுள்ளது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2023ம் ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, இதேபோன்ற அடைப்புகளால் நீரோட்டம் தடைபட்டு, வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து பல நாட்கள் மக்கள் தவித்தனர். தற்போதைய அடைப்பை உடனடியாக நீக்காவிட்டால், லேசான மழை பெய்தால் கூட கேப்டன் காட்டன் கால்வாய் உடைப்பெடுத்து வியாசர்பாடி, முல்லை நகர், சத்தியமூர்த்தி நகர், உதயசூரியன் நகர், எழில் நகர் மற்றும் ஜே.ஜே.ஆர் நகர் போன்ற ஒட்டுமொத்த பகுதிகளும் மீண்டும் தண்ணீரில் மூழ்கும் என அப்பகுதி மக்கள் கதறுகின்றனர்.

வழக்கமாக வெள்ள நீர் சில மணி நேரங்களில் வடிந்துவிடும். ஆனால், வடிகால் தடம் முக்கால்வாசி அடைபட்டுள்ளதால், தேங்கிய மழைநீர் வடிவதற்கு பல நாட்களாகும். இப்பகுதியில் மயானம் கட்டுவதற்காகத் தான் இந்த மணல் கொட்டப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறி, கழிவுகளை அகற்ற ஒப்பந்ததாரருக்கு 3 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளனர். மேயர் பிரியா தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான டன் தூர் வாரப்பட்டுள்ளதாக கூறினாலும், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. கால்வாயில் இன்னும் ஆகாயத்தாமரைகளும் குப்பை கழிகளும் மண்டிக் கிடக்கின்றன. மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்த ஆபத்தான அடைப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால், இந்த ஆண்டும் வட சென்னை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நடுரோட்டிற்கு வருவது நிச்சயம் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories: