திருத்தணி, ஜூலை 28: திருத்தணி அருகே திமுக பிரமுகர் மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த சம்பவத்தில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூர் திமுக அவைத் தலைவரும், பேரூராட்சி கவுன்சிலராகவும் சுப்பிரமணி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரது மகன் ரஜினி (48), விசைத்தறி நெசவு தொழிலாளி. இவர் பேரூர் திமுக கிளை தலைவராக பணியாற்றி வந்தார். ரஜினி நேற்று முன்தினம் அரக்கோணம் அருகே குருவராஜ்பேட்டையில் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்டு நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், திருத்தணியில் இருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் புச்சிரெட்டிபள்ளி அருகே சாலை ஓரத்தில் ரஜினி மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அவ்வழியாக அதிகாலை சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். திருத்தணி போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து திமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? வழிப்பறி கும்பல் தாக்கியதில் இறந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
