கடலூர், ஜூலை 28: கடலூர் அடுத்த செம்மண்டலம் காந்தி நகரை சேர்ந்தவர் பபிதா(33). இவருக்கும் குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த பாரதிதாசனுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. பின்னர் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்த சக்திவேல் மகன் இளவரசன்(33) என்பவருடன் பபிதா பழகி, அவருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இளவரசன் அடிக்கடி மது குடித்துவிட்டு, பபிதாவிடம் பிரச்னை செய்து வந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த இளவரசனின் தந்தை சக்திவேல் பபிதாவை சமாதானம் செய்வதாக மற்றொரு மகன் மணிகண்டன் வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் சக்திவேல் அவரது மனைவி குணாவதி, இவர்களது மகன்கள் மணிகண்டன், இளவரசன் ஆகிய 4 பேரும் வீட்டில் அடைத்து வைத்து பபிதாவை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து பபிதா கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.
