×

பாப்பாரப்பட்டி அருகே ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

 

தர்மபுரி, ஜூலை 28: பாப்பாரப்பட்டி ஏரியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி டவுனை ஒட்டியபடி 200 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு பிக்கிலி, பெரியூர், மலையூர் போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வந்து சேர்கிறது. இந்த ஏரியை சுற்றியுள்ள பனைகுளம், ஏ.பாப்பாரப்பட்டி, திருமல்வாடி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஏரிக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

இதனால், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி இன்றி வறண்டு காணப்படுகிறது. ஏரி சீரமைப்பு பணி இல்லாததால் புதர் மண்டி கிடக்கிறது. மாலை நேரத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளிலிருந்து கோழி கழிவுகளை கொண்டு வந்து ஏரியில் மலைபோல் குவித்து விட்டு செல்கின்றனர். இதனால், அந்த வழியாக செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புற சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த ஏரியில் கோழி கழிவுகளை அகற்றி மீண்டும் யாரும் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஏரியின் நீராதாரம் உயரவும் நடவடிக்கை வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Papparapatti ,Dharmapuri ,panchayat administration ,Papparapatti lake ,Dharmapuri district ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...