×

1,52,814 குவிண்டால் சர்க்கரை இருப்பு: சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விருது

 

தர்மபுரி, ஜூலை 28: தர்மபுரி மாவட்டம் கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பருவத்தில் 11.05 சதவீத சர்க்கரை கட்டுமானம் (பிழிதிறன்) எடுத்து 2,73,290 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் 1,52,814 குவிண்டால் சர்க்கரை இருப்புடன் மாநிலத்தில் சிறந்த ஆலையாக விருது பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கடந்த 1990 மே 13ம் தேதி, அன்றைய முதல்வர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.33 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1992ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அரவையைத் தொடங்கியது. இந்த ஆலை 2500 டன் கரும்பு அரவைத்திறன் கொண்டது. இந்த ஆலையில் 4,607 கரும்பு விவசாயிகள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒவ்வொரு அரவை பருவத்திலும் 4.50 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஆலை நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளால் இந்த ஆலை லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில், 2025-2026ம் ஆண்டுக்கான கரும்பு அரவை ஏப்ரல் மாதம் முடிந்தது. மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரத்து 464 டன் கரும்பு அரவை செய்து, 2,73,290 குவிண்டால் சர்க்கரை எடுக்கப்பட்டது. 11.05 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் (பிழிதிறன்) எடுக்கப்பட்டது. பிழிதிறனில் கோபாலபுரம் சுப்ரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 10.43 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் எடுக்கப்பட்டது. இந்த ஆலை கடந்த 3 ஆண்டுகளாக தேசிய அளவில் விருது பெற்று சாதனை படைத்து வருகிறது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், `கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆண்டு முழுவதும் சரியான நேரத்தில் அரவை பருவத்தை தொடங்கி முடிக்கிறது. இதனால், மாநில அளவில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

மேலும், சர்க்கரை கட்டுமானம்(பிழிதிறன்) அதிகமாக எடுக்கப்பட்டது. இதனால், மாநிலத்தில் சிறந்த ஆலையாக தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து அரசின் விருது கிடைத்து வருகிறது. லாபத்தில் இயங்கக் கூடிய ஆலையாக சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை விளங்குகிறது,’ என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025-2026ம் ஆண்டு அரவைக்கு, 8 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பதிவு செய்யப்பட்டது. சுமார் 2 லட்சத்து 47 ஆயிரத்து 464 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. கரும்பு தோட்டங்களிலிருந்து ஆலையின் அரவைக்கு கரும்பினை சரியான நேரத்தில் கொண்டு வந்து சேர்க்கும் நேரம், அரவை நேரம் எல்லாம் தொழில்நுட்ப ரீதியாக ஆலை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் பலனாக 11.05 சதவீதம் சர்க்கரை கட்டுமானம் (பிழிதிறன்) அதிகமாக எடுக்கப்பட்டு, 2,73,290 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் சிறந்த ஆலையாக முன்னிலையில் உள்ளது. ஒரு டன் கரும்பு அரவை செய்தால் 100 கிலோ சர்க்கரை கிடைக்கும். ஆனால், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 110 கிலோ சர்க்கரை கிடைத்தது. தற்போது, ஆலையில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 814 குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிறந்த ஆலையாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்று வருகிறது,’ என்றனர்.

Tags : Subramania Siva Cooperative Sugar Mill ,Dharmapuri ,Gopalapuram, Dharmapuri district ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...