×

மதுரையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கொடூரம் தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை காவல்நிலையம் முன் பெண் தீக்குளிப்பு: கொடுத்த கடனைக் கேட்டு அவதூறாக மிரட்டியதால் விபரீதம்

 

மதுரை: கந்துவட்டி கொடுமையால் தீயணைப்பு வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், காவல் நிலையம் முன் தீக்குளித்த மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. அதிகரிக்கும் கந்து வட்டி கொடுமைகள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் ரன் வட்டி, மீட்டர் வட்டி, கம்ப்யூட்டர் வட்டி முதலான நிறைய வட்டிக்கொடுமைகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக அரங்கேறி மக்களின் வாழ்க்கையுடன் விளையாடி வந்தன. மிகக்கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதன் பேரில், வட்டிக்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. தற்போது மதுரை மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை மீண்டும் தலைதூக்க துவங்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சத்யா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (41). சென்னை கிண்டியில் தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றினார். விடுமுறைக்கு உசிலம்பட்டி வந்தவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதவிட்டு விட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த வீடியோவில், ‘‘நல்லிவீரன்பட்டி பிரவின்குமார், உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார், சுகப்பிரியா ஆகியோரிடம் வட்டிக்கு கடன் வாங்கினேன்.

முறையாக வட்டி செலுத்திய நிலையில், அசல் தொகையை கட்ட முடியாததால் அடிக்கடி அதிக வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தனர். எனது நிலத்தை அபகரித்து பெற்றோரை வெளியேற்றி விட்டனர். எனது மனைவியிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். இதனால், மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என பேசியுள்ளார். இதையடுத்து உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிந்து நல்லிவீரன் பட்டியைச் சேர்ந்த பிரவீன்குமாரை (38) கைது செய்தனர்.

பெண் தீக்குளிப்பு: மதுரை குலமங்கலம் ரோடு மீனாம்பாள்புரம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி செல்வி (45). இவர், அதே பகுதியை சேர்ந்த கருப்பாயி என்பவரிடம் ரூ.45 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்காக தினசரி ரூ.300 செலுத்த வேண்டும். ஆனால், 10 நாட்களாக இந்த பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் செல்வியின் வீட்டிற்கு கருப்பாயி மற்றும் சிலர் சென்று கடனை திருப்பி கேட்டு இழிவான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த செல்வி, நேற்று முன்தினம் இரவு செல்லூர் காவல் நிலையத்தின் முன் சென்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட போலீசார், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கருப்பாயி, சந்தானபேச்சி ஆகியோர் மீதும், தற்கொலைக்கு முயன்றதாக செல்வி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பல ஆண்டுகளாக இல்லாத கந்துவட்டி கலாச்சாரம், மதுரையில் மீண்டும் தலைதூக்குவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai ,
× RELATED முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர்...