சென்னை: நீண்டகால பணியிடை நீக்கம் தொடர்வதை சட்டப்படி ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஏஓவை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ராமசந்திரன், பட்டா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் 2025 நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் உதயகுமாருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏழு மாதங்களுக்கு மேலாகியும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே மனுதாரரை ஏழு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி பி.டி. ஆஷா, லஞ்ச ஒழிப்பு விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், உச்ச நீதிமன்றத தீர்ப்புகளின்படி நீண்டகால பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மனுதாரரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவரை வேறு ஏதேனும் நான் சென்ஸிட்டிவ் பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
