சென்னை: கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பணிகளை ஆய்வு செய்து கூறியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். பெருமளவு திடக்கழிவுகளை உருவாக்குபவர்கள், திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவுகள், அபாயகரமான கழிவுகளை தனித்தனியே பிரித்து வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அதைப்போல குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலிருந்தும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதற்கு உரிய விழிப்புணர்வு பணியினை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
கட்டிட இடிபாட்டு கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினர் பின்பற்றிடவும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார். இக்கூட்டத்தில் இணை ஆணையர் (பணிகள்) சரவணன், காணொலி காட்சியின் வாயிலாக வட்டார துணை ஆணையர்கள் ஸ்வேதா சுமன், (வடக்கு), கவுஷிக், (மத்தியம்), அதாப் ரசூல் (தெற்கு), தலைமைப் பொறியாளர் பாலமுரளி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
