- கோயம்புத்தூர்
- கொனியம்மன் கோயில்
- அறக்கட்டளைகள் அமைச்சர் மற்றும்
- அறக்கட்டளைகள்
- கோயம்புத்தூர் பெரிய அங்காடி…
கோவை: கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அமைச்சர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில், கடந்த 15ம் தேதி உண்டியல் திறப்பு நடைபெற்றது. அப்போது, கோயிலில் உதவி ஆணையர் நேரடி மேற்பார்வையில் நிரந்தர உண்டியல்கள் 9 திறக்கப்பட்டு அதில் தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் ஆகியவை எண்ணப்பட்டன. மற்ற 6 தற்காலிக உண்டியல்கள் (திருவிழா கால உண்டியல்) செயல் அலுவலர், ஆய்வாளர், கோயில் பூசாரி மற்றும் பணியாளர்கள் முன்பாக சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இந்நிலையில், இதில் ஒரு உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை மொத்தமாக கோயில் பணியாளர்களால் திருடப்பட்டதாக பக்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் கோனியம்மன் கோயிலில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கோயில் செயல் அலுவலர் குமார் உக்கடம் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். தொடர்ந்து உண்டியல் பணம் எண்ணப்பட்ட 15ம் தேதி பதிவான கோயில் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விசாரணையில், 5 தற்காலிக உண்டியல்களில் உள்ள பணத்தை மட்டும் எண்ணி விட்டு, ஊழியர்கள் ஒரு உண்டியலை மட்டும் ஒளித்து வைத்துள்ளனர். பின்னர் அதிகாரிகள் சென்ற பின்னர் ஒரு உண்டியலில் உள்ள ஒரு பணத்தை ஊழியர்கள் திருடி உள்ளனர்.
அந்த உண்டியலில் மட்டும் ரூ.31 ஆயிரம் இருந்துள்ளது. இந்த பணத்தை சீட்டு விற்பனையாளர் பாலசுப்பிரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், பிரதீப்குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் மறுநாள் (16ம் தேதி) பங்கு பிரித்து கொண்டுள்ளனர். இதையடுத்து, உக்கடம் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 4 பேர், உண்டியல் திருட்டை கண்டுபிடிக்காத கோயில் செயல்அலுவலர் குமார், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் உள்பட 4 பேர் என மொத்தம் 7 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும் உதவி ஆணையர் உஷா நந்தினிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
