×

தீண்டாமையால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஓய்வூதியம் 3 மாதமாக நிறுத்திவைப்பு: ரூ.4.51 கோடியை விடுவிக்குமா தமிழக அரசு?

மதுரை: தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டப்படி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும் ஓய்வூதியம் கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 843 பேருக்கு வழங்க வேண்டிய ரூ.4.51 கோடியை தமிழக அரசு விடுவிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரால் படுகொலை செய்யப்பட்டால் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.

இதில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி, அக்குடும்பத்தின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காகவும், குடும்ப பராமரிப்பிற்காகவும் மாநில அரசால் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு குடும்ப ஓய்வூதிய திட்டமானது பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் தலா ரூ.18,950 வழங்கப்படுகிறது. இந்த குடும்ப ஓய்வூதியம் கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய 3 மாதங்களாக வழங்கப்படவில்லை.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 843 பேருக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.4.51 கோடி (ரூ.4,51,42,650) இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், உரிய நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டோர் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்த ஓய்வூதியத்தை உரிய வட்டியுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் கருப்பையா கூறுகையில், ‘‘பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும், குடும்ப பராமரிப்பிற்காகவும் அரசின் விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. பட்டியல் மற்றும் பழங்குடியின மக்கள் கொலை செய்யப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை மூன்று மாதங்களாக நிறுத்திவைப்பதென்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை சார்ந்த பட்டியலின மக்களின் குடும்ப வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் கூட சமூக நீதித்துறையால் வழங்கப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சமூக நீதித்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பட்டியல் மற்றும் பழங்குடியின குடும்பங்களை சார்ந்த 843 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மாநில அரசு வழங்கிட வேண்டிய குடும்ப ஓய்வூதியங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நேரத்தில் வழங்காமல் காலம்தாழ்த்தும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், இந்த பணத்திற்கு உரிய வட்டியும் வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : Tamil Nadu government ,Madurai ,
× RELATED மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை...