×

மந்திரி ராஜினாமாவால் நிரந்தர தீர்வு கிடைக்காது: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

மதுரை: ஒன்றிய அமைச்சர் ராஜினாமாவால் நிரந்தர தீர்வு கிடைக்காது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். மதுரை திருப்பாலை யாதவர் மகளிர் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா வரவேற்கத்தக்கது.

ஆனால் அது மட்டுமே நீட் விவகாரத்திற்கு தீர்வாகாது. நீட் தேர்வே தேவையில்லை என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. நீட் தேர்வு மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எதிரானதாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள் மற்றும் தவறுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி வாய்ப்புகளை பலர் இழந்திருக்கலாம். இதற்கு ஒன்றிய அரசே பதில் சொல்ல வேண்டும்.

ஒரு அமைச்சரின் ராஜினாமாவால் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது. இருப்பினும், மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக இந்த ராஜினாமாவை பார்க்கலாம். அதனை வரவேற்கிறோம். ஆனால் அதோடு நிற்காமல் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். நீட் ரத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Madurai ,Union ,Energy ,Madurai Thiruppalai Yadav Women's College ,
× RELATED மாணவர்களுக்கு தேவையற்ற நீட் தேர்வை...