×

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இன்று 3ம் கட்ட பேச்சுவார்த்தை; அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா இல்லை: நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் மேலும் தீவிரம்

 

புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று மாலை கரப்பான்பூச்சி கட்சியுடன் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அதேநேரம் ஒன்றிய அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் அளித்தல், கடந்த 20ம் தேதி டெல்லியில் நடந்த ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகளை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பாக, ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோருடன் நேற்று அரசியல் சாசன கிளப்பில் 2 மணி நேரம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாணவர்கள் மீதான வழக்கு ரத்து மற்றும் நிவாரணத் தொகை ஆகிய 2 கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது. அதேசமயம், 26 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ஒன்றிய அரசின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றார். இந்நிலையில், நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டம் ஒருபக்கம் நடைபெறும் நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் இன்று மாலை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதுகுறித்து அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். அதில் எந்த சமரசமும் செய்ய முடியாது.

அதற்கு ஒன்றிய அரசு சம்மதிக்காவிட்டால், மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். போராட்டம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பல மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மதுக்கடைகளை சீக்கிரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், டெல்லி போலீசார் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் களப்பணியில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நேற்று தேசிய தேர்வு முகமையின் 47 அதிகாரிகளை ஒன்றிய அரசு பணிநீக்கம் செய்தது. வினாத்தாள் கசிவை தடுக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்ட வரைவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்கவும், விரைவு நீதிமன்றங்கள் மூலம் விசாரணை நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம் வரும் திங்கள்கிழமை (நாளை மறுநாள்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், மாணவர்களுடன் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் உரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் கருத்துக்களுக்கு நன்றி தெரிவித்தார். இருப்பினும், தேசிய தேர்வுகள் முகமையின் 47 அதிகாரிகளை நீக்கியது மட்டும் போதாது என்று கூறிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, ‘வினாத்தாள் கசிவுக்கும், மாணவர்கள் தற்கொலைக்கும் முழுப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், ஒன்றிய கல்வி அமைச்சரின் ராஜினாமா பேச்சுக்கே இடமில்லை என்றும், பொறுப்பில் இருந்து விலகுவது தீர்வாகாது என்றும் ஒன்றிய அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றத்தை முடக்குவோம்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி வந்தாலும், அவர் பதவி விலகும் வாய்ப்பை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது. அதற்குப் பதிலாக, தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கும், நாடாளுமன்றத்தில் வினாத்தாள் கசிவு எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கும் ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த உறுதியான நிலைப்பாட்டிற்கு மத்தியிலும், தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவி விலக கோரும் அழுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள், கல்வி அமைச்சர் நீக்கப்படும் வரை நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவோம் என்று கூறி மழைக்கால கூட்டத்தொடரில் தொடர் ஒத்திவைப்பு தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மற்றும் அமைதியான முறையில் பேரணி நடத்தியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது போன்ற பிற கோரிக்கைகளில் ஒன்றிய அரசு இணக்கம் தெரிவித்த போதிலும், தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முற்றிலும் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Karappanpuchi Janata Party ,Minister ,Dharmendra Pradhan ,NEW DELHI ,Union Minister of Education ,NEET ,Karappanbuchi ,Union Minister ,
× RELATED காஷ்மீரில் புதிய மாற்றம்...