திருப்பத்தூர் அருகே மதுப்பிரியர்களின் கூடாரமான பூங்கா

*உடைந்த கண்ணாடி துண்டுகளால் அச்சம்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி கூட்ரோடு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கருவிகள் மற்றும் தனி உடற்பயிற்சி கூடமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் உடற்பயிற்சி கூடத்தில் ஆரம்ப காலத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த உடற்பயிற்சி கூடம் காலியாகி மது அருந்துபவர்களின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பூங்கா வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் குப்பைகள் குவிந்து கிடப்பதுடன் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் மது அருந்த வருபவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே உடைத்து விட்டு செல்வதால், பூங்கா முழுவதும் கண்ணாடி சிதறிக்கிடக்கிறது. இதன்காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்கள் தற்போது பூங்காவிற்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் பயன்பாடின்றி கிடக்கின்றன. உடைந்த மதுபாட்டில்களால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், பெற்றோர்களும் அவர்களை பூங்காவிற்கு அனுப்ப மறுக்கின்றனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா தற்போது பராமரிப்பின்றி அழிவை நோக்கி செல்வதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பூங்காவை சுத்தம் செய்து, சேதமடைந்த வசதிகளை சீரமைத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, சமூக விரோத செயல்கள் மற்றும் மது அருந்துவோர் உள்ளே நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்காவை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: