போதிய பருவமழை பெய்யாமல் ஏமாற்றம் இயற்கை பேரிடர் மாவட்டமாக திருப்பத்தூரை அறிவிக்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்பத்தூர் : போதிய பருவமழை பெய்யாமல் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதால் இயற்கை பேரிடர் மாவட்டமாக திருப்பத்தூரை அறிவிக்கவேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்துகொண்டு தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

விவசாயி: சுதந்திரம் அடைந்து 79 ஆண்டுகள் முடிய உள்ள நிலையில் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலையில் இன்றும் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அங்குள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.கலெக்டர் : சாலை பணி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் செயல்படுத்தப்படும்.

விவசாயி : ஆம்பூர் அருகே உள்ள ஆணைமடகு அணையில் உள்ள களிமண்ணில் சிக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நடக்கிறது. எனவே ஆணைமடகு அணையில் உள்ள களிமண்ணை அகற்ற வேண்டும். கசிவுநீர் குட்டை வெட்ட மானியம் வழங்கவேண்டும்.

நீர்நிலைகளில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவேண்டும். கருத்தலை புழுக்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். நெக்னாமலை பகுதியில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும்.கலெக்டர்: நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள் : செம்மறி ஆடுகளுக்கு வாய்ப்புண் அதிகளவில் பரவி வருகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாணியம்பாடி உழவர் சந்தையில் இட நெருக்கடி அதிகளவில் உள்ளது. குரிசிலாப்பட்டு அருகே உள்ள அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர்செல்லும் வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்.

விவசாயிகள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதற்கு அதிகளவில் டிராக்டர்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வெங்களாபுரம் பகுதியில் சேதமடைந்த அணைக்கட்டு, காக்கனாம்பாளையம் அருகே சேதமடைந்த தடுப்பணை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும். இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத காரணத்தால், விவசாய பணிகள் மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

எனவே விவசாயிகளை காக்க திருப்பத்தூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பால்னாங்குப்பத்தில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. எனவே அவற்றை பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்.

தும்பேரி பகுதியில் உள்ள உரக்கடைகளில் அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது. பெரியாங்குப்பத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். தெக்குப்பட்டு ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மல்லகுண்டா பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது நிலங்களில் கரும்பு பயிரிட்டு உள்ளோம். எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.கலெக்டர்: இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: