டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு: ராகுல்காந்தி, திரிணாமுல் காங். குற்றச்சாட்டு

டெல்லியில் ஜூலை 20 அன்று நடந்த மாணவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது ரப்பர் குண்டு மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக ராகுல்காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாதுகாப்புப் படையினரால் பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதாகக் கூறப்படும் மாணவர் போராட்டக்காரர் ஒருவரை ஊடகங்கள் முன் அறிமுகப்படுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது,’ மாணவர்கள் மீது ரப்பர்குண்டு மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் சாஹில் காயம் அடைந்துள்ளார். போராட்டக்காரர்கள் ரப்பா் குண்டு துப்பாக்கிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரப்பர் குண்டு துப்பாக்கிகள் எப்போது பயன்படுத்தப்பட்டன என்பதை நான் விளக்க விரும்புகிறேன். மூவர்ணக் கொடியை ஏந்தி அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்தபோது என் சகோதரர் ஒருவர் பெல்லட் துப்பாக்கித் தாக்குதலுக்கு ஆளானார். இதில் சாஹில் கண் சேதமடைந்து உள்ளது. அந்த கண்ணால் அவர் பார்க்க முடியவில்லை .

இவர்கள்தான் நம் நாட்டின் எதிர்காலம். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது; அவர்கள் ரப்பர்குண்டு துப்பாக்கிகளால் சுடப்பட்டுள்ளனர் மற்றும் தடியடியில் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் அமைதியான முறையில் போராடுகிறார்கள். காவல்துறைப் பணி நியமனத்திற்கான தேர்வை சாஹில் எழுதியிருந்தார். ஆனால் வினாத்தாள் கசிந்துவிட்டது. அவரது (சாஹிலின்) பெற்றோர்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய பணத்தைக் கொண்டுதான் அவருக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அரசாங்கம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். அரசாங்கம் நமது எதிர்காலத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அவர்கள் மூன்று விஷயங்களைச் சொல்கிறார்கள்: மாணவர்களின் போராட்டத்திற்கும் வினாத்தாள் கசிவுக்கும் காரணமான கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்; நமது எதிர்காலத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மற்றும் தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த அமைப்பை நிர்வகிக்கும் பிரதமா் மோடி, ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்கள் மாணவர்கள் மீதான தாக்குதல்களையும் மிரட்டல்களையும் நிறுத்துங்கள். தர்மேந்திர பிரதான் ஒரு குற்றவியல் கல்வி அமைச்சர். நமது கல்வி முறையின் வீழ்ச்சியின் அடையாளம் அவர். எனவே தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தச் சகோதரன் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானதற்கும், ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கும் தர்மேந்திர பிரதான் தான் காரணம்’ என்றார்.

மாணவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது. திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் சாகரிகா கோஷ் கூறுகையில்,’ஜூலை 20 அன்று நடந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளன.

இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.ஆயுதமற்ற மாணவர் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் ரப்பர் குண்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

இது பிரதமர் மோடி அரசின் அதிர்ச்சியூட்டும் கொடூரச் செயல். பொறுப்புள்ள தேர்வு முறையை வலியுறுத்தி வீதிகளில் போராடிய, ஆயுதமற்ற மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த நமது குழந்தைகள் மீது, பார்வையிழப்பை ஏற்படுத்தக்கூடிய உயிரிழப்பை விளைவிக்கக்கூடிய ரப்பர் துப்பாக்கிகளைப் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இப்போது வெளியாகியுள்ளது’ என்றார். திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓ பிரையன்’ இது ஒரு அமைச்சரை நீக்குவதோடு முடிந்துவிடக்கூடிய விவகாரம் அல்ல; அது போதாது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.

Related Stories: