7 வயது சிறுவனை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை: சம்பவம் நடந்த 2 மாதங்களில் தீர்ப்பு

 

பஹ்ரைச்: பஹ்ரைச்சில் 7 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் கிராமத்தில், கடந்த மே 2ம் தேதி இரவு 7 வயது சிறுவன் தனது இரண்டு சகோதரர்களுடன் இசை நிகழ்ச்சி ஒன்றை பார்க்கச் சென்றுள்ளான். நள்ளிரவில் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது அண்டை வீட்டுக்காரரான முகேஷ் நிஷாத் (26) என்பவரை வழியில் சந்தித்துள்ளனர்; அவர் தன்னுடன் வருமாறு சிறுவர்களை அழைத்தபோது, பாதிக்கப்பட்ட சிறுவனின் மற்ற இரண்டு சகோதரர்கள் மறுக்கவே, இந்த 7 வயது சிறுவன் மட்டும் அவருடன் சென்றுள்ளான்.

மறுநாள் காலை, அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மர்ம உறுப்பில் ஏற்பட்ட கடுமையான காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த பஹ்ரைச் போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் கவுதம், குற்றவாளியான முகேஷ் நிஷாத்திற்கு தூக்கு தண்டனை விதித்து, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வெறும் இரண்டு மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; வழக்கின் குற்றப்பத்திரிகை ஜூன் 20ம் தேதியும், குற்றச்சாட்டுகள் ஜூன் 22ம் தேதியும் பதிவு செய்யப்பட்டன.

குற்றவாளி கிராமத்துப் பெண் ஒருவருடன் இருந்ததை இந்த சிறுவன் பார்த்து அவரது தாயாரிடம் கூறியதால், ஆத்திரமடைந்த முகேஷ் நிஷாத் சிறுவனை பழிவாங்கியதாக சிறப்பு மாவட்ட அரசு வழக்கறிஞர் சாந்த் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து பஹ்ரைச் எஸ்பி விஸ்வஜீத் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘முறையான விசாரணை மற்றும் வலுவான ஆதாரங்கள் காரணமாகவே குற்றவாளிக்கு மிகக் குறுகிய காலத்தில் மரண தண்டனை பெற்றுத் தர
முடிந்தது’ என்றார்.

Related Stories: