×

சூலூர் அருகே சாமியார் வேடத்தில் நோட்டமிட்டு காரில் வந்து கைவரிசை காட்டிய ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

*வாட்ஸ் அப் மூலம் பரவிய தகவலை வைத்து மடக்கிய பொது மக்கள்

சூலூர் : கோவை மாவட்டம், சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சாமியார் வேடத்தில் வந்து தொழிலதிபர்களிடம் மிரட்டிப் பணம் பறிப்பதையும், நேரம் பார்த்து திருடுவதையும் ராஜஸ்தான் கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது. சின்னியம்பாளையம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்திற்கு கடந்த 20ம் தேதி சாமியார் வேடத்தில் வந்த இருவர், குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் எடுக்கச் சென்ற நேரத்தை பயன்படுத்தி, ஒருவர் ஆபீஸ் அறைக்குள் நுழைந்து உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் இல்லை என கூறியதும் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்பு மறுநாளும் அதே நேரத்திற்கு வேறு ஒரு நபருடன் மீண்டும் வந்துள்ளனர். காவி உடை அணிந்தவர் வெளியே நிற்க, கருப்பு உடை அணிந்த சாமியார் நைசாக அலுவலகத்திற்குள் புகுந்து மேஜையில் இருந்த ரூ.5,000 ரொக்கப் பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பியுள்ளனர். இதையடுத்து சிசிடிவி காட்சியை பார்த்தபோது சாமியார் வேடமிட்ட நபர் பணத்தை திருடிச் சென்றது அம்பலமானது.

உடனடியாக உஷாரான உரிமையாளர், அந்த வீடியோ ஆதாரங்களை உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்து எச்சரித்தார். மேலும், இது குறித்து நீலாம்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.இந்நிலையில், அன்னூர் சாலையில் காரில் சென்று கொண்டிருந்த உள்ளூர்காரர் ஒருவர், வாட்ஸ் அப் குழுவில் பார்த்த அதே கார் முன்னால் செல்வதை கவனித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவர், உடனடியாக அந்த காரை பின்தொடர்ந்தபடி தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து நண்பர்கள் விரைந்து வந்து சாமியார்கள் வந்த காரை அதிரடியாக மடக்கிப்பிடித்தனர். இதைத்தொடர்ந்து நீலாம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கும்பலாக வந்து தனிமையில் இருக்கும் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களை குறி வைத்து கொள்ளையடிப்பது தெரியவந்தது.

மேலும் பணம் தர மறுப்பவர்களிடம் எலுமிச்சம் பழத்தை வைத்து மந்திரம் செய்து விடுவோம் என பயமுறுத்தி பணம் பறித்துள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தை பார்த்து, நைசாக உள்ளே புகுந்து பணத்தை திருடிச் செல்வதையும் தொழிலாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

Tags : Rajasthan ,Sulu ,GANG ,SAMIYAR ,SINNYAMPALAYAM AREA ,KOWAI DISTRICT ,SULUR ,
× RELATED ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான வரி அலுவலர் சிறையில் அடைப்பு