ஆலந்தூர், ஜூலை 24: விதிமீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடத்திற்கு நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆலந்தூர் ஏகாம்பர தாபதார் தெருவை சேர்ந்தவர் உமாபதி. இவரின் நிலத்திற்கு அருகில் நாராயணன் மற்றும் அருண்குமார் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி உள்ளனர். இந்நிலையில், கட்டிட பணியின்போது உமாபதி உள்ளிட்ட 7 பேர், தங்கள் நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுவதாக மாநகராட்சி அதிகாரியிடம் புகார் அளித்தனர். இருப்பினும் புகாரையும் மீறி கட்டிடம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து உமாபதி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆலந்தூர் மண்டல செயற்பொறியாளர் மணிமொழி, உதவிபொறியாளர் ஸ்டீபன் ஆகியோர் விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 மாடி கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், அடையாறு மண்டலம், 178வது வார்டுக்கு உட்பட்ட தரமணி சன்னதி தெருவில் விதிமீறி கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டிடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
