செய்யூரில் புனித தோமையார் திருநாள் திருப்பலி

 

செய்யூர், ஜூலை 20: வடக்கு செய்யூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித தோமையார் திருநாள் திருப்பலி கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த வடக்கு செய்யூரில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களின் ஒருவரான புனித தோமையாரின் பாத பதிவுகள், முழங்கால் தடம், கைவிரல் பதிவுகள் கொண்டுள்ள ஜெபத்தோட்ட பூங்கா அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித தோமையாரின் திருநாள் விழா கோலாகலமாக நடைபெறும்.

தற்போது இந்த பாத பதிவுகள் அமைந்துள்ள தலத்தில் புதிதாக வேளாங்கண்ணி மாதா கெபி அமைக்கப்பட்டு புனித தோமையாரின் திருநாள் விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் பாத பதிவுகள் தலத்தை சிறப்பிக்கும் வகையில் \”பாதம் காட்டிய பாதை\” புத்தகம் வெளியிடப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இவ்விழாவில் அருட்தந்தையர்கள் பாக்கிய ரெஜிஸ், பெஞ்சமின் நேசமணி, பிரபு தாஸ், ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு திருப்பலியாற்றினர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியவாறு ஜெப தோட்டம் வந்து புனித தோமையார் பாதப்பதிவு அடங்கிய சிறு பாறை மற்றும் போதனை கல் உள்ளிட்டவைகளுக்கு மலர் தூவி வணங்கினர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் சந்தியாகு, பிரபு, நிர்மல், அலெக்ஸ், ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Related Stories: